சாதிக் பாட்ஷா கொலை செய்யப்பட்டது உண்மைதான்.. வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: வைகோ
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா மர்மமான முறையில் உயிரிழக்கவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும், திருச்சியில் பிரபாகரன் என்ற நபர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் உண்மையுள்ளது என்றும், இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் துப்பு துலக்க ஆ.ராசாவின் நண்பரும், கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகியுமான சாதிக் பாட்ஷாவிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
இந்த சூழலில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்ஷா பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், திமுக புள்ளிகளின் நெருக்கடியினால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், திருச்சியில் நேற்றிரவு திடீரென செய்தியாளர் சந்திப்பு நடத்திய, அரியலூர் மாவட்டம், அய்யூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர், தான் "தமிழர் நீதிக்கட்சியின்" தலைவர் சுப.இளவரசனனின் உதவியாளர் என்றும், ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார், முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட் ஆகியோருடன் சேர்ந்து சாதிக் பாட்ஷாவை கொலை செய்ததாகவும் கூறினார்.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், இந்த ரகசியத்தை தற்போது வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இன்று நிருபர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டி: ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சியை சேர்ந்த பிரபாகரன் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையே. 2011ல் அரியலூரில் வைத்து இதே பிரபாகரன் என்னை சந்தித்து, இந்த தகவல்களை கூறினார்.
கொலையை, தற்கொலை என்று மறைத்து நாடகம் நடந்து வருகிறது. எனவே சாதிக் பாட்ஷா மரணம் குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே வரும். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.