தேச துரோக வழக்கில் இருந்து விடுவியுங்கள் - வைகோ மனு
தேச துரோக வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: தேச துரோக வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்துள்ள மனுமீது ஜூலை 10-ல் விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் குற்றம் சாட்டுகிறேன் என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டதாக கூறி தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். தேசத் துரோக வழக்கு காரணமாக அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.
புழல் சிறையில் வைகோ
8 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் இருக்கும் இந்த தேசத்துரோக வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தானாக முன் வந்து எழும்பூர் நீதிமன்றத்தின் 13வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன்னிலையில் ஆஜரானார் வைகோ.
ஜாமீனில் விடுதலை
அப்போது, நீதிபதியிடம் பிணையில் செல்ல விருப்பமில்லை என வைகோ தெரிவித்ததாக கூறியதையடுத்து, சிறையிலடைக்கப்பட்டார். 52 நாட்கள் சிறையில் இருந்த அவர், மே 25ஆம் தேதி புழல் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானார்.
விடுவிக்கக் கோரி மனு
இதனிடையே தேச துரோக வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார். வைகோ தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை ஜூலை 10ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.