தீபாவளி துணி எங்க வாங்கலாம்.. 'பேஸ்புக்' பதிவை 'ஷேர்' செய்த வைகோ!
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மிகவும் வித்தியாசமான அரசியல் தலைவர் என்பதில் சந்தேகம் இல்லை. நல்ல விஷயம் எதுவாக இருந்தாலும் அதை நாலு பேருக்கு எடுத்துக் கூறத் தயங்காதவர் வைகோ.. அப்படித்தான் தற்போது வைகோ பெயரிலான பேஸ்புக் பக்கத்தில் ஒரு ஜாலியான காரியத்தைச் செய்துள்ளார் வைகோ.
பேஸ்புக்கில் தமிழரசன் கணேசன் என்பவர் ஒரு பதிவை இட்டுள்ளார். அது தமிழக அரசின் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தை புகழ்ந்த பதிவாகும். அதை டிவிஎஸ் சோமு என்பவர் ஷேர் செய்துள்ளார். அதேபோல அந்தப் பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் வைகோ.
அந்த ஷேர் தகவலில் கணேசன் கூறியிருப்பதாவது...
எப்படியும் புது ஆடைகள் எடுக்கத்தான் போறீங்க..
எப்படியும் புது ஆடைகள் எடுக்கத்தான் போறீங்க.. Tamilarasan Ganesan அவர்களின் பதிவைப் படித்துவிட்டு எடுங்களேன்... (டி.வி.எஸ். சோமு..)
நண்பர்களே!
500 ரூபாய் சேலையை 1500 ரூபாய்க்கு விற்கும் (நடிகர்கள் - விளம்பரங்களுக்கு யார் குடுப்பாங்க!) இன்றைய பண்டிகை சூழலில்.. நமது பணம் உரியமுறையில் செலவளிக்கப்படுவது இன்பம் !
ஒரு சேலை சட்டையாவது...
எனவே அனைவரும் ஒரு சேலையையாவது சட்டையையாவது கோ-ஆப்-டெக்ஸ்ல வாங்குங்க மக்கா !
சகாயத்தின் புதுமையான டிசைன்கள்
அதுவும் இந்த முறை முன்னாள் மதுரை ஆட்சியர் சகாயம் அவர்கள் தற்போது எம்.டி.ஆக .. பேக்கேஜிங் முதல் டிசைன்கள் வரை பலவித புதுமைகளை புகுத்தியுள்ளார் என்பதை நேரில் அறியமுடிந்தது ! அதுவும் கோரா காட்டன் சாரிகள் செம ! அவசியம் கூட்டுறவுத்துறைக்கு உங்கள் ஆதரவை தெரிவியுங்க !
ஆதரிப்பது கடமை
பல ஆண்டு நஷ்டத்திற்குப்பின் முதல் முறையாக சென்ற ஆண்டு இலாபம் ஈட்டியிருக்கும் இந்நிறுவனத்தை ஆதரிப்பது நமது கடமை ! அந்நிறுவனம் ஈட்டிய ஒரு கோடி ரூபாய் இலாபத்தை தினமும் ரூ 65 க்கு உழைக்கும் ஏழை நெசவுத் தொழிலாளிகளுக்கு இலாபப்பங்கு மூலம் பிரித்துக்கொடுத்திருக்கிறார் திரு சகாயம் இ.ஆ.ப அவர்கள்.
நமது பணம் யார் கைக்கு செல்கிறது என்பதுவும் முக்கியமானதுதானே !
கண்ணில் பட்ட நல்ல விஷயத்தை நாலு பேர் மத்தியில் வைகோ கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரியதுதான்....