அப்துல்கலாம் வீணை வாசிக்கும் சிலையும், பகவத்கீதை புத்தகமும் வைத்தது ஏன்? - கொதிக்கும் வைகோ
மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வீணை வாசிக்கும் சிலையும் அதன் அருகே பகவத் கீதை புத்தகமும் வைத்தது ஏன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: மக்கள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் சிலை அருகே திருக்குறளை வைக்காமல் பகவத் கீதை புத்தகத்தை வைத்தது ஏன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுள்ளார்.
மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மணிமண்டபத்தை கடந்த 27ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த மணிமண்டபத்தின் 4 மூலைகளிலும் 4 வகையான சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்துல்கலாம் குழந்தைகளிடம் அன்பு காட்டுபவர் என்பதால், குழந்தைகளுடன் விளையாடுவதுபோன்று முதல் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
2வது சிலை அறிவியல் சார்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது குழந்தைகள் விண்வெளியில் உள்ள கிரகங்களை பார்வையிடுவது போல அமைக்கப்பட்டுள்ளது.
3வது சிலை குழந்தைகள் அறிவை வளர்த்துக்கொள்ள புத்தகம் படிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும், 4வது சிலை குழந்தைகள் ஒருவரையொருவர் கை தூக்கிவிட்டு உதவி செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளன.
அப்துல் கலாம் வீணை
இதுதவிர அப்துல்கலாம் வீணை வாசிக்கும் சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் அருகில் பகவத்கீதை புத்தகமும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அப்துல்கலாம் சிலை அருகே பகவத் கீதை புத்தகம் வைக்கப்பட்டதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வைகோ கண்டனம்
இதனிடையே இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல்கலாம் மணிமண்டபத்தில், அப்துல் கலாம் வீணை வாசிப்பது போன்ற சிலையும், பகவத் கீதையும் எதற்காக வைக்கப்பட வேண்டும்? என்று கேட்டார்.
திருக்குறள் புத்தகம்
இதனால் மத்திய அரசு என்ன சொல்ல வருகிறது? உலகில் எங்கு சென்றாலும் தமிழில் பேசி தமிழ் இலக்கியங்களை போற்றியவர் அப்துல் கலாம். அவர் சிலை அருகே திருக்குறளைத்தான் வைத்திருக்க வேண்டும்.
பாஜகவின் கனவு பலிக்காது
திருக்குறளை விட உயர்ந்த புத்தகம் உலகத்தில் இருக்கிறதா என்று கேட்ட வைகோ, தமிழகத்திற்குள் எப்படியாவது, ஏதாவது ஒருவகையில் காலடி எடுத்து வைக்கவேண்டும் என்ற பாஜகவின் திட்டம் ஒருபோதும் பலிக்காது என்று கூறினார். கழகங்கள் இல்லாத ஆட்சி என்று கூறி கழகம் செய்து வருவதாகவும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.