பாஜக கன்னத்தில் தேர்தல் ஆணையம் விட்ட பளார் அறை... வைகோ அதிரடி!
குஜராத் ராஜ்யசபா தேர்தல் முடிவின் மூலம் பாஜகவிற்கு தேர்தல் ஆணையம் கன்னத்தில் அறை வழங்கியுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை: குஜராத் ராஜ்யசபா தேர்தல் முடிவின் மூலம் பாஜகவின் கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக பேட்டியளித்துள்ளார்.
குஜராத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் பாஜகவின் அதிகார துஷ்பிரயோகத்தையும் மீறி காங்கிரஸ் கட்சியின் அகமது படேல் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு நீதி போதனை செய்யும் மோடி, குஜராத் ராஜ்யசபா தேர்தலில் நீதி தவறிவிட்டார் என்றார்.
ஜனநாயகத் திருடர்கள்
தொடர்ந்து பேசிய வைகோ, ராஜ்யசபா தேர்தலில் பாஜக சார்பில் அமித்ஷா, ஸ்மிருதி இரானி போட்டியிட்டனர். அவர்களின் வெற்றி வாய்ப்பு உறுதிதான். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஏன் போட்டி வேட்பாளரை நிறுத்த வேண்டும். 6 எம்எல்ஏக்களை குதிரை பேரத்தில் கைப்பற்றியது பாஜக. பாஜகவிற்கு வாக்களித்த 2 எம்எல்ஏக்கள் ஜனநாயகத் திருடர்கள்.
நீதி போதனை
பிரதமர் மோடி மாதம் ஒருமுறை வானொலியில் பேசுகிறார், நீதி போதனை செய்கிறார். வெளிநாடுகளில் இந்தியாவைப் பற்றி தம்பட்டம் அடிக்கிறார் மோடி. ஆனால் குறுக்குவழியில் மாநிலங்களின் சுதந்திரத்தில் தலையிடுகிறார்.
எமர்ஜென்சி
எத்தனையோ நெருக்கடி நிலையை நாடு சந்தித்து உள்ளது. இப்போது பாஜக அரசின் மூலம் மிகப்பெரிய நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. மாநில அரசின் சுதந்திரம் பறிபோய் உள்ளது.
தர்மம் வெல்லும்
தேர்தல் ஆணையத்தின் முடிவால் நீதி வென்றுள்ளது. மோடியின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது. தர்மம் எப்படியும் வெல்லும் என்பதை குஜராத் தேர்தல் நிரூபித்துள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.