நீதிபதிகளை இழிவுபடுத்தியவரை அழைத்து விருந்து வைக்கிறார் ஆளுநர்.. வைகோ ஆவேசம் #NakkeeranGopal
Recommended Video
சென்னை: காவல்துறையினரையும், நீதிபதிகளையும் இழிவுபடுத்தியவரை அழைத்து டீ பிஸ்கட் கொடுத்து விருந்து வைக்கிறார் ஆளுநர். ஆனால் இன்று பத்திரிகையாளரை, பத்திரிகை ஆசிரியரைக் கைது செய்து மிரட்டுகிறார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.
நக்கீரன் கோபால் கைது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தகவல் கிடைத்ததும் வைகோ கிளம்பி நேராக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தின் முன்பு வந்தார். அங்கு கோபாலை சந்திக்க தன்னை அனுமதிக்கக் கோரினார். ஆனால் போலீஸார் அனுமதிக்கவில்லை. ஒரு வக்கீலாக வந்துள்ளேன். என்னை அனுமதிக்க வேண்டும். அனுமதிக்காவிட்டால் அது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல். இதுதொடர்பாக தீர்ப்பே இருக்கிறது என்று கோபமாக கூறினார் வைகோ.
ஆனால் போலீஸார் வைகோவை அனுமதிக்கவில்லை. ஆனால் வைகோ விடவில்லை. தொடர்ந்து கோபாவேசமாக வாதிட்டார். இதனால் அந்த இடமே பரபரப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், நக்கீரன் கோபால் உண்மையான தேசபக்தர். இந்த அரசில், யார் மீது தேச துரோக வழக்குப் போடப்படுதோ அவர்தான் உண்மையான தேச பக்தர். திருமுருகன் காந்தி மீது போட்டார்கள்.. வளர்மதி மீது போட்டார்கள். பொடாவை விட மோசமாக நடக்கிறார்கள்.
இது ஒட்டுமொத்த ஊடகங்களுக்கும் விடப்படும் எச்சரிக்கை. பத்திரிகைகள் அனைத்தும் திரண்டு எதிர்க்க வேண்டும். இன்று நக்கீரனுக்கு வந்துள்ளது. நாளை ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் வரும். அனைவரும் திரண்டு வர வேண்டும். மக்களுக்கு இதைப் புரிய வைக்க வேண்டும்.
காவல்துறையை இழிவுபடுத்தியவரை அழைத்து ஆளுநர் விருந்து வைக்கிறார். நீதிபதிகளை இழிவுபடுத்தியவரை அழைத்து டீ பிஸ்கட் கொடுக்கிறார் ஆளுநர்.
பத்திரிகையாளரைக் கைது செய்து மிரட்டுவதா. நக்கீரன் கோபால் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டார். அவர் ஏற்கனவே ஜெயிலைப் பார்த்தவர். தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா.
ஒரு வக்கீலாக வந்துள்ளேன்.. கோபாலைப் பார்க்க அனுமதிக்காவிட்டால் அவதூறு வழக்கு போடுவேன். ஒரு கைதின்போது எப்படி நடக்க வேண்டும் என்று தீர்ப்பே உள்ளது. அதை மீறுகிறது காவல்துறை. நான் வக்கீலாக மட்டுமே வந்துள்ளேன். என்னை அனுமதித்தாக வேண்டும் என்றார் வைகோ.
நடு ரோட்டில் அமர்ந்து வைகோ மறியல்
போலீஸார் கோபாலைப் பார்க்க தன்னை அனுமதிக்காதைதத் தொடர்ந்து அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைகோ சாலையில் அமர்ந்து தரணாவில் குதித்தார். அவருடன் பத்திரிகையாளர்களும் போராட்டத்தில் குதித்தனர். மேலும் பத்திரிகையாளர்களும் காவல் நிலையம் முன்பு திரண்டு வருகின்றனர். அந்த இடமே பரபரப்பாக காணப்படுகிறது.
[இன்னும் சிலர் கைதாக வாய்ப்பு.. நக்கீரன் ஊழியர்களை கைது செய்ய காவல்துறை தீவிரம்!]