ஜெ. உண்மையிலேயே 7 தமிழர்களையும் விடுவிக்க நினைத்தால் நாடகம் எதற்கு?: வைகோ
சேலம்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய முயற்சிப்பது, தமிழகத்திலுள்ள ஒரு கோடிக்கும் மேலான தமிழ் பற்றாளர்கள் மற்றும் தமிழ் உணர்வு மிக்க இளைஞர்களின் ஓட்டுக்களை மொத்தமாக கவர்வதற்கு ஜெயலலிதா நடத்தும் நாடகம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்கு தண்டனை கைதிகளாக இருந்தனர். நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர். இவர்கள் 7 பேரும் சுமார் 25 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர்
இந்நிலையில் நேற்று தமிழக அரசின் தலைமைச் செயலர், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இந்த 7 தமிழரையும் சிறையில் இருந்து விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆகையால் இவர்களை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கை விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சேலத்தில் நடந்த மக்கள் நலக்கூட்டணி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இது தொடர்பாக பேசியதாவது:
7 தமிழர்கள் விடுதலை...
தமிழக அரசு நேற்று மாலை, ஏழு தமிழர்கள், 25 ஆண்டுகள் சிறை தண்டணை அனுபவித்து விட்டதால், அவர்களை சிறையிலிருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு மத்திய அரசின் அனுமதியை கோருவதாக உள்துறை செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
161வது பிரிவின் படி...
ஜெயலலிதா உண்மையிலேயே, ஏழு தமிழர்களையும் விடுவிக்க நினைப்பாரேயானால், அமைச்சரவையைக் கூட்டி, சட்டத்தின் 161-வது பிரிவின்படி, ஆளுநருக்கான அதிகாரத்தை பயன்படுத்தி, ஏழு பேரையும் விடுதலை செய்யும் முடிவை எடுத்திருக்க வேண்டும்.
அக்கறை காட்டவில்லை...
ஏழு பேர் மீதான தூக்கு வழக்கில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கும் நிலையில், விடுதலைக்கு மத்திய அரசிடம் ஆலோசனை கேட்பது, உண்மையிலேயே, ஏழு தமிழர்களை விடுவிக்க தமிழக அரசு அக்கறை காட்டவில்லை எனதைத்தான் காட்டுகிறது.
நாடகம்...
தமிழகத்திலுள்ள ஒரு கோடிக்கும் மேலான தமிழ் பற்றாளர்கள் மற்றும் தமிழ் உணர்வு மிக்க இளைஞர்களின் ஓட்டுக்களை மொத்தமாக கவர்வதற்கு ஜெயலலிதா நடத்தும் நாடகம் தான் இது' என்றார்.
இவர் ஓட்டுக்களைக் கவர ஜெயலலிதா முயற்சி என்கிறாரா, இளைஞர்களே ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடுங்கள் என்கிறாரா?
தலைவர்கள் பங்கேற்பு...
இந்தக் கூட்டத்தில் இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.