வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பயிர் காப்பீட்டு பிரமியத்தை தமிழக அரசே செலுத்த வேண்டும் - வைகோ
சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டு பிரிமியம் தொகையை தமிழக அரசே செலுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் லட்சக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்கள் அழிந்துள்ளன. வாழ்வாதாரங்களை இழந்துள்ள விவசாயிகள் அரசின் உதவிகளை எதிர்பார்த்து நிற்கும் நிலையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள நிவாரண உதவிகள் விவசாயிகளுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
இந்நிலையில் பயிர்க் கடனுக்கான காப்பீட்டு பிரிமியத்தை வரும் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், சிட்டா அடங்கல், வேளாண் துறை அதிகாரி பரிந்துரை போன்ற ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மழை வெள்ளத்தால் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சிட்டா அடங்கல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே பிரிமியம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். மழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பயிர்க் காப்பீட்டு பிரிமியம் தொகையை தமிழக அரசே செலுத்த வேண்டும்.
அதுபோல மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கல்விக் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.