பட்டாசு தொழிலைப் பாதுகாக்க... முதலாளிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு: வைகோ
சிவகாசி: பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கக் கோரி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொள்ளும் பட்டாசுத் தொழிற்சாலை முதலாளிகளுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
சிவகாசிக்கு உலகப்புகழை பெற்றுத் தரும் பட்டாசு தொழில், 5 இலட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.
மத்திய காங்கிரஸ் அரசின் அலட்சியப் போக்காலும் சீனப் பட்டாசுகளின் இறக்குமதியாலும் சிவகாசி பட்டாசுத் தொழில் பேரபாயத்தில் சிக்கியுள்ளது. இத்தகைய பேரபாயத்தில் இருந்து பட்டாசு தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற் துறைகளைச் சேர்ந்த 14 சங்கங்கள் ஒருங்கிணைந்து வருகின்ற 15.04.2014 அன்று சிவகாசி, திருத்தங்கல், நாரணாபுரம், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி பகுதிகளில் 24 மணி நேர முழு கடையடைப்பு நடைபெறும் என்றும், அன்று காலை 9 மணி முதல் 6 மணி வரை சிவகாசி டான்பாமாவில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
பட்டாசுத் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இலட்சக்கணக்கான ஏழை, எளிய உழைக்கும் மக்களின் நலனுக்காகவும், சிவகாசி பகுதியின் பட்டாசுத் தொழில் பாதுகாப்புக்காகவும் நடைபெறும் இந்த அறவழிப் போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2014 மே திங்கள் 16-ஆம் தேதிக்குப் பின்னர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதியாக அமையும். அப்போது சிவகாசி பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து தடைகளும் முழுமையாக அகற்றப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்' என இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.