ஜெனிவாவில் 'அண்ணன்' வைகோவை தாக்க முயன்ற சிங்களர்கள் - ஸ்டாலின் கடும் கண்டனம்
ஜெனீவாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தாக்க முயன்றதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை : வைகோவை சிங்களர்கள் தாக்க முன்றதை மத்திய அரசும் கண்டிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஐ,நா. மனித உரிமை ஆணையத்தின் 36-வது அமர்வு, ஜெனிவாவில் கடந்த 11ஆம் தேதி முதல், வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் ஈழத் தமிழர்கள் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக வைகோ ஜெனிவா சென்றுள்ளார்.
கடந்த 18ஆம் தேதிமுதல் வைகோ தனது கருத்தை முன்வைத்து பேசி வருகிறார். ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் பொதுச்செயலாளர் வைகோ இன்று இரண்டு முறை பேசினார். சிவிட்டு வந்த வைகோவை சிங்களவர்கள் பலர் சூழ்ந்து கொண்டார்கள். அதில் ஒரு பெண்மணி, நீ இலங்கைப் பிரஜை இல்லையே? நீ இலங்கையைப் பற்றி எப்படிப் பேசலாம்? என்று கேட்டார்.
ஸ்டாலின் கவலை
மனித உரிமை கவுன்சில் கூட்டத்திலேயே சிங்களர் தாக்க முயன்றது கவலை அளிக்கிறதாக ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தார். வைகோவை சிங்களர் தாக்க முன்றதை மத்திய அரசும் கண்டிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முகநூலில் பதிவு
தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றி பேசிய மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்களை, சிங்களர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிங்களர்கள் செயலுக்கு கண்டனம்
மனித உரிமைக் கவுன்சிலுக்கு உள்ளேயே, இந்தியாவில் இருந்து சென்ற ஒரு தமிழரின் மனித உரிமைக்கு எதிராக சிங்களர்கள் சிலர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது.
ஸ்டாலின் கண்டனம்
இதுகுறித்து, மத்திய அரசு உடனடியாக தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைகோ தடுத்து நிறுத்தப்பட்டதற்கு அப்போதே கண்டனம் தெரிவித்தார் ஸ்டாலின் என்பது நினைவிருக்கலாம்.