தேமுதிக, மநகூ மாநாட்டில் அதிகம் அம்மா சென்டிமெண்ட் பேசிய வைகோ!
சென்னை: என் உருவ பொம்மையை பாடை கட்டி திமுகவினர் எடுத்துச் சென்றதை என் தாயார் பார்த்திருந்தால் அவரது இதயம் பொறுத்திருக்காது என்று மாமண்டூர் மாநாட்டில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் மக்கள் நல கூட்டணி தேமுதிக மாநாடு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய வைகோ, அதிகம் அட்டாக் செய்தது திமுகவைத்தான்.
கூட்டத்தில் பேசிய வைகோ, தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது. ஆட்சிக்கு வந்தால் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விடுவோம். ஆட்சிக்கு வந்தால் விவசாய,கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.திமுக குடும்பத்தினர் நடத்தும் மதுபான ஆலைகளில் அரசு கொள்முதல். அதிமுக,திமுக, மது கொள்கையில் கூட்டு கொள்ளையர்கள் என்றார்.
முதல்வர் நாற்காலி
1967ல் விருகம்பாக்கத்தில் திமுக மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு பேரறிஞர் அண்ணாவை முதல்வர் நாற்காலிக்கு அழைத்துச் சென்றது. அதுபோல இந்த மாநாடு விஜயகாந்தை முதல்வர் நாற்காலிக்கு அழைத்துச் செல்லும் என்றார்.
ஆட்சி மாற்றம்
தமிழகம் இன்று அனைத்துத் தளங்களிலும் பாழ்பட்டுக் கிடக்கிறது. விவசாய நிலங்கள் பாழாகியுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 1,472 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டம், மீனவர் பிரச்னை என தீர்க்கப்படாத பல பிரச்னைகள் உள்ளன. தமிழகத்துக்கு இப்போதைய தேவை ஆட்சி மாற்றம். எனவே, திமுக, அதிமுக கட்சிகளை மீண்டும் ஆட்சியில் அமர விடமாட்டோம்.
மீனவர்களுக்குப் பாதுகாப்பு
இனப்படுகொலைக்கு துணைபோன திமுக,அதிமுக,பாமகவை கூண்டில் நிறுத்துவோம்.பணம் இல்லை என்றால் தொண்டர் படை கூட்டம் இருக்கிறது.மக்கள் நல கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் பாதுகாகப்படுவார்கள். இலங்கை கடற்படையின் அட்டூழியம் ஒழிக்கப்படும்.
தொண்டர்களின் பலம்
அதிமுக, திமுக கட்சிகளைப்போல எங்கள் கூட்டணியிடம் பணமில்லை. ஆனால் அதைவிட ஆயிரம் மடங்கு பலம் வாய்ந்த தொண்டர்களின் பலம் உள்ளது. 4 பேர் கொண்ட கூட்டணி எங்கே ஜெயிக்கப்போகிறது என்று சந்தேகப்பட்டனர்.
100 சதவிகித வெற்றி
தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வந்ததும் எங்கள் வெற்றி 70 சதவீதம் உறுதியானது. தமாகா வந்ததும் அது 100 சதவீதம் உறுதியாகி விட்டது.
சொத்துக்கள் பறிமுதல்
கல்விக்கடனை அரசே ஏற்றுக்கொள்ளும்,வேலையில்லா திண்டாட்டதிற்கு தீர்வு காணப்படும்.தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்வோம்.
சாதிக் பாட்சா கொலை
ஸ்டாலினும் சாதிக்பாட்சா வும் 4 முறை சந்தித்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. சாதிக்பாட்சாவை கொலை செய்து, அவரது வீட்டுக்கு உடலை கொண்டு சென்று, தூக்கு மாட்டினர் என்றார்.
பாடை கட்டிய திமுகவினர்
கருணாநிதி பற்றி பேசிய பேச்சுக்களுக்கு நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும் திமுகவினர் என்னுடைய உருவபொம்மையை பாடை கட்டி எடுத்துச் சென்று எரித்தனர். நல்லவேளை இதைப் பார்க்க என்னுடைய அம்மா உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவரது நெஞ்சம் பொறுத்திருக்காது.
சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சி
நான் தேர்தலில் தோற்றுப்போனால் கூட வருந்த மாட்டார். என்னை சிறையில் அடைத்தால் கூட அவர் மகிழ்ச்சிதான் அடைவார். நான் நிம்மதியாக, பாதுகாப்புடன் சிறையில் இருக்கிறேன் என்று நினைப்பார் ஆனால், என்னுடைய உருவ பொம்மையை யாரேனும் எரிப்பதைப் பார்த்தால் அவரது நெஞ்சம் பொறுக்காது என்றும் மாநாட்டில் பேசிய வைகோ கூறினார்.