கடினமான + 2 வேதியியல் வினாத்தாள்- 2 மாணவிகள் தற்கொலை: வைகோ வேதனை
சென்னை: தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு வேதியியல் வினாத் தாள் கடினமாக இருந்ததால் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேதனை அளிக்கிறது; இது குறித்து நிபுணர் குழு அமைத்து தீர்வு காண வேண்டும் என மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தில் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வேதியியல் பாட கேள்வித்தாள் பதிலளிக்க முடியாமல் மிகவும் கடினமாக இருந்ததால் சரியாக பதலிளிக்க முடியவில்லை என்ற மன வருத்தத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாணவியும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு மாணவியும் தற்கொலை செய்துள்ளது மிகவும் வேதனைக்குரியதாகும்.
பள்ளித் தேர்வுகள் மாணவ -மாணவிகளுக்கு எந்த அளவிற்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்தச் சம்பவம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கிறது. இத்தகைய சூழலிலிருந்து மாணவ, மாணவிகள் விடுவிக்கப்படவேண்டும்.
தேர்வுகளை பயமில்லாமல் ஆர்வத்துடன் எதிர்கொள்ள உளவியல் ரீதியாக மாணவர்களை தயார் செய்யும் பணியை பள்ளி கல்வித்துறை மிகவும் முக்கியமான பொறுப்பாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
இந்த வருடம் சி.பி.எஸ்.சி., கணக்குப் பாடத் தேர்வு பதிலளிக்க முடியாத வகையில் கடினமாக இருந்ததால், சி.பி.எஸ்.சி. வாரியம் நிபுணர் குழு அமைத்து தீர்வு காண முடிவு செய்துள்ளன.
வேதியியல் பாடம் மாணவர்களின் எதிர்கால வாய்ப்புகளுக்கு மிக முக்கியமான பாடம் ஆகையால், தமிழக பள்ளிக் கல்வித்துறை இந்த வருடம் வேதியியல் தேர்வு குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் திறனுக்கு அதிகமான கடினமான கேள்விகள் இருக்குமானால் மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.