விஷ்ணுப்பிரியா உள்ளிட்ட பிற வழக்குகளிலும் போலீஸ் தீவிர கவனம் செலுத்த வேண்டும்- வைகோ
மதுரை: சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை போலீஸார் தீவிரமாக துப்பு துலக்கி கைது செய்ததைப் போல விஷ்ணுப்பிரியா மரணம் உள்ளிட்ட பிற வழக்குகளிலும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதுரை வந்த வைகோ அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், சுவாதி கொலை வழக்கில் 8 நாளில் குற்றவாளிகளை பிடித்த போலீசாரை பாராட்டுகிறேன். இதே போல் விஷ்ணுபிரியா மரணம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களிலும் போலீசார் அதிக கவனம் செலுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள் முடங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. சமூக விரோத செயல்களுக்கு மதுவே முழு காரணம். அதனை ஒழிக்க வேண்டும் என்றார் வைகோ.
மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த்தின் தேமுதிக இணைந்திருக்கிறதா அல்லது வெளியேறி விட்டதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அது குறித்து எனக்குத் தெரியாது. உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி இணைந்தே போட்டியிடும் என்றார் வைகோ.
உண்மையில் சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணையாமல் தொகுதிப் பங்கீடு மட்டுமே தேமுதிகவும், தமாகவும் செய்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.