அண்ணா பிறந்த நாளில் சிறை கைதிகளை விடுதலை செய்க: வைகோ
சென்னை: அண்ணா பிறந்த நாளையொட்டி சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"சிறைச்சாலை என்பது தண்டிக்கும் இடம் அல்ல; சீர்திருத்தும் இடம் என்ற கோட்பாட்டை உலகில் பல நாடுகள் ஏற்றுக் கொண்டு உள்ளன. சந்தர்ப்ப சூழ்நிலையால், நேர்ந்துவிட்ட சம்பவத்தால், நீதிமன்றத் தீர்ப்பால் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்படும் கைதிகள், சிறைச்சாலையில் திருந்திய மனிதர்களாக மாறி முறையான வாழ்க்கை வாழத் துடிக்கிறார்கள்.
சிறைவாசிகள், அதிலும் ஆயுள் தண்டனை அடைந்தோர், பத்து ஆண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்றதைக் காரணம் காட்டி விடுவிக்கப்படாமலேயே சிறையில் வாடுகின்றனர்.
பல சிறைவாசிகள் 15 ஆண்டுகள் கடந்தும் ஏன் 20 ஆண்டுகள் கடந்தும் சிறையில் இருக்கின்றனர். அவர்களது குடும்பங்கள் சின்னாபின்னமாகி, மரணத்தைவிடக் கொடுமையான மனத் துன்பங்களுக்கு சிறைவாசிகள் ஆளாகி உள்ளனர். ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களை, மேலும் தண்டிப்பதைப் போல இந்த நடவடிக்கைகள் அமைகின்றன.
பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள சிறைவாசிகள், மனம் பக்குவப்பட்டவர்களாகவே விடுதலை பெற்றபின் நெறியோடு வாழவே துடிக்கின்றனர். குற்றப்பிரிவுகளைக் காட்டி விடுவிக்கப்படாத சிறைவாசிகளை, பொது மன்னிப்பில் விடுவிக்க அரசு முன்வர வேண்டும்.
சிறைவாசியைப் பரோல் விடுப்பில் அனுப்புவது ஒரு மனிதாபிமான நடவடிக்கை ஆகும். குடும்பத்தினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது குடும்பத்தில் ஏற்படும் நற்காரியங்களில் பங்கு ஏற்கவோ, குடும்பத்தில் ஏற்படும் துயரச் சம்பவங்களில் அல்லது அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய அவசியம் கருதியோ பரோல் விடுப்பு தரப்படுகிறது. அப்படி விடுப்பில் செல்லும் சிறைவாசி, தவிர்க்க இயலாத காரணங்களால் குறிப்பிட்ட நாளில் சிறைக்குத் திரும்பி வர இயலாமல் ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்பட்டு விட்டால்கூட, இந்தியத் தண்டனைச் சட்டம் 224 பிரிவுகளின்கீழ் மேலும் தண்டிக்கப்படுகின்றனர். இதனால், பொது மன்னிப்பில் அவர்கள் விடுவிக்கப்படுவதும் கிடையாது. இந்த அணுகுமுறை மாற்றப்பட்டு, மனிதாபிமான அடிப்படையில் அவர்களையும் பொது மன்னிப்பில் விடுவிக்க அரசு முன்வர வேண்டும்.
வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு சிறைவாசி, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தால் பரோல் விடுப்பு கிடையாது என்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத மனிதாபிமானமற்ற நடவடிக்கை ஆகும். நீதிமன்றத்திலே மேல்முறையீடு ஆண்டுக் கணக்கில் நீடித்துக் கொண்டே போகும். நீதிமன்றத்தில் விடுதலையாகக் கூடிய ஒருவருக்கும் பரோல் கிடையாது என்பது நியாயமற்றது ஆகும். எனவே, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கும் பரோல் விடுப்பு வழங்க வேண்டும்.
திருந்திய மனிதர்களாக, சிறைச்சாலையின் உள்ளே ஏராளமான மனிதர்கள் பொது மன்னிப்பு பெற முடியாமலும், பரோலில் செல்ல முடியாமலும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த குறைபாடுகளைப் போக்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பேரறிஞர் அண்ணாவின் 106ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போர் விடுவிக்கப்பட வேண்டும். பரோல் விடுப்பில் சென்று குறிப்பிட்ட நாளில் திரும்பாதவர்களுக்கு ஒருநாள், இருநாள் தாமதமாகிவிட்டது என்று காரணம் காட்டி அவர்கள் விடுதலை பெற முடியாத இன்னலுக்கு ஆளாக்கும் நடைமுறையை மாற்றி, அவர்களையும் மனிதாபிமானத்தோடு விடுதலை செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும்'' என வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.