20 தமிழர்கள் சுட்டுக்கொலை: தமிழக அரசு நீதியை நிலைநாட்ட வேண்டும்- வைகோ
சென்னை: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழகர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு நீதியை நிலைநாட்ட முன்வரவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் கூறியுள்ளார். தமிழக அரசு இந்த வழக்கில் தங்களை ஒரு தரப்பாக இணைத்துகொள்ள வேண்டும் என்றும், இதற்காக தமிழக முதல்வரை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து மேல் நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தருமபுரி மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த அப்பாவி கூலி தொழிலாளிகள் 20 பேர் ஆந்திர மாநில வனத்துறை மற்றும் காவலர்கள் பேருந்தில் கடத்தப்பட்டு சேஷாச்சலம் பகுதியில் கடும் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொன்று பிரேதத்தை கொண்டு வந்து வேறொரு இடத்தில் போட்டனர்.
இது பற்றி தப்பி உயிர் பிழைத்த மூன்று சாட்சிகள் மனித உரிமை ஆணையம் முன்பு நிறுத்தப்பட்டதில் விசாரணை நடத்திய தேசிய மனித உரிமை ஆணையம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. தேசிய மனித உரிமை ஆணையம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து ஆந்திர அரசு வழக்கு போட்டு தடை பெற்றுள்ளது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஆகஸ்ட் 3 அன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் அடுத்த கட்டம் குறித்து இன்று ஆலோசனை நடத்தினோம். கூட்டத்தில் சில முடிவுகளை எடுத்துள்ளோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு நீதியை நிலைநாட்ட முன்வரவேண்டும்.
தமிழக அரசு இந்த வழக்கில் தங்களை ஒரு தரப்பாக இணைத்துகொள்ள கோரிக்கை வைக்கிறோம். இதற்காக தமிழக முதலமைச்சரை சந்திக்க விரும்புகிறோம். எங்களை சந்திக்க வாய்ப்பு தரவேண்டும் அவ்வாறு சந்திக்காவிட்டால் ஏற்கனவே எடுத்துள்ள முடிவுகளை நிறைவேற்றுவோம் என்றார்.