நான் பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.. என்னை சோதிக்காதீர்கள்.. வைகோ வார்னிங்
தூத்துக்குடி: நான் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறேன். என்னை சோதிக்காதீர்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில், வீரபாண்டிய கட்டபொம்மனின் 214வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி மதிமுக சார்பில் நினைவு தின பொதுக்கூட்டம் நடந்தது.
கட்சி பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இங்கு போலீசாரின் கெடுபிடியை மீறி, ஏராளமானோர் திரண்டுள்ளீர்கள். இங்கு வந்தவர்களுக்கு, போலீசார் தடைகளை ஏற்படுத்தினர்.
கட்டபொம்மன் ஜாதி தலைவரா, கட்சி தலைவரா... சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். அவரது நினைவு தினத்தில் கூட்டம் நடத்த, போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
கிராமங்களில் உளவுத்துறையினர் சென்று, கட்டபொம்மன் நினைவு தினத்திற்கு வாகனங்களில் சென்றால், வழக்கு பதிவு செய்வோம் என, மிரட்டியுள்ளனர்.
தமிழக அரசின் குறைகளை, ஒரு சதவீதம் தான் பேசியுள்ளேன். குறை சொல்ல வேண்டுமானால், இன்னும் 99 சதவீதம் உள்ளது. நான், அமைதியாக சென்று கொண்டிருக்கிறேன். தேவையில்லாமல், என்னை சோதிக்க வேண்டாம்.
கெடுபிடிகளை விதிக்கும் போலீசாருக்கு, எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் காலங்களில், இது போல் நடந்து கொள்ள வேண்டாம் என்றார் கோபமாக.