ஜெனீவாவிலிருந்து சென்னை திரும்பிய வைகோவுக்கு உற்சாக வரவேற்பு
ஜெனீவாவிலிருந்து சென்னை திரும்பிய மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு வைகோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை: ஜெனீவாவில் நடந்த மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வில் பங்கேற்று ஈழத் தமிழர்கள் குறித்து பேசிய மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு வைகோ நேற்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் வைகோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில், மனித உரிமை ஆணையத்தின் 36 ஆவது அமர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த அமர்வில் பங்கேற்று ஈழத்தமிழர்களின் உரிமைக் குரலை ஒலிப்பதற்காக ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ செப்டம்பர் 17- ஆம் தேதி ஜெனீவா சென்றடைந்தார்.
இலங்கை தமிழர்களுக்கான உரை
செப்டம்பர் 18 ஆம் தேதி உரையாற்றிய வைகோ, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் சோக வரலாற்றை எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் 3 முறை பேசிய வைகோ ஈழத்தமிழர்களின் அரசியல் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டியதன் தேவையை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினார்.
வைகோ மீது ஐ.நா.மன்றத்தில் தாக்குதல் முயற்சி
ஐ.நா. மனித உரிமை மன்றத்திலேயே வைகோவை சூழ்ந்து கொண்ட சிங்களர், இனப்படுகொலைக்கு எதிராக பேசியமைக்கு தாக்க முயன்றனர். இதையடுத்து அவருக்கு ஐ.நா.சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆலோசனை கூட்டங்களை முடித்துக் கொண்டு ஜெனீவாவிலிருந்து நேற்றிரவு வைகோ சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் மதிமுக தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டி
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கடந்த 16 ஆண்டுகளில் 4 முறை சுவிட்சர்லாந்து செல்ல விசா மறுக்கப்பட்டது. ஜெனீவா பயணம் பயனுள்ளதாக அமைந்ததற்கு உதவிய அனைத்து தமிழ் ஊடகங்களுக்கும் நன்றி.
ராஜபக்சே குற்றவாளி
இலங்கை பிரச்சனைக்கு தீர்வு தனி ஈழம் வேண்டும் என்று மனித உரிமை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தினேன். இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை. இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்த ஏதுவாக ஐ.நா பொதுச்செயலாளரை அனுப்ப வேண்டும் என மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பேசினேன் என்றார்.