விஜயகாந்த் அடிப்பாரோ என வைகோ, திருமாவுக்கு பயம்.. ‘தலைப்பாகை’க்கு காரணம் சொல்லும் ஈவிகேஎஸ்
சிதம்பரம்: தனது கட்சி வேட்பாளர்களைத் தாக்குவதைப் போல் தங்களையும் தாக்கி விடுவாரோ என்ற பயத்தில் தான் வைகோவும், திருமாவளவனும் தலைப்பாகை அணிந்துள்ளதாக புதிய விளக்கம் அளித்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமீபகாலமாக பச்சை தலைப்பாகை அணிந்தே பொது இடங்களுக்கு வருகிறார். அவர் ஜோதிடரின் ஆலோசனைப்படி இவ்வாறு பச்சை தலைபாகை அணிந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், விவசாயிகளின் மேம்பாட்டிற்காக அவ்வாறு அணிந்திருப்பதாக அவர் விளக்கமளித்தார்.
இந்நிலையில், வைகோவின் தலைப்பாகைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
இது தொடர்பாக சிதம்பரத்தில் செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:-
பூரண மதுவிலக்கு...
நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். தமிழக மக்கள் பூரண மதுவிலக்கு வேண்டும் என உறுதியாக இருக்கிறார்கள். கருணாநிதி ஆட்சி அமைத்தவுடன் அதை நிறைவேற்றுவார்.
மக்கள் கோபம்...
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அப்போது ஜெயலலிதா நேரில் சென்று சந்திக்கவில்லை. ஆனால், தற்போது தேர்தல் தோல்வி பயத்தால் மக்களை சந்தித்து வருகிறார். இருப்பினும், அவர் மீது மக்கள் கோபத்தில்தான் இருக்கின்றனர். அதை தேர்தலில் காட்டுவார்கள். அந்த கோபத்தால்தான், வாக்கு சேரிக்க செல்லும் அ.தி.மு.க வேட்பாளர்களை தொகுதிக்குள் அனுமதிக்க மக்கள் மறுக்கிறார்கள்.
தலைப்பாகைக்கு காரணம்...
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தனது கட்சி வேட்பாளர்களை கண்டபடி தாக்கி வருகிறார். அதேபோல், தங்களையும் தாக்கி விடுவாரோ என்று பயந்துதான், வைகோவும், திருமாவளவனும் தலைப்பாகை அணிந்துள்ளனர். விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வராததால் எங்கள் தலை தப்பியிருக்கிறது.
வழக்குகள்...
என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நான் சட்டப் படி எதிர்கொள்வேன். அதே சமயம் கவர்னரையும் வழக்கில் குறுக்கு விசாரணை செய்வேன்' என்றார்.