வைகோவின் செல்போன் ஒட்டுக் கேட்பு? கைது செய்ய தமிழக அரசு தீவிரம்?
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தமிழக உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாக மதிமுக தரப்பில் இருந்து குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. எந்த நேரத்திலும் வைகோ கைது செய்யப்படக்கூடும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுகவின் அறிவிக்கப்படாத கொள்கைப் பரப்புச் செயலாளராக செயல்பட்டவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. கூட்டணியில் ஏற்பட்ட சிக்கலில் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டு சட்டமன்ற தேர்தலை புறக்கணித்தது மதிமுக. ஆனாலும் அதிமுகவை எந்த சூழ்நிலையிலும் எதிர்க்கவில்லை.
லோக்சபா தேர்தலில் அதிமுக - மதிமுக இடையே கூட்டணி உருவாகலாம் என்று பேசப்பட்டு வந்த நிலையில் திடீரென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுகவினை விட்டு ஒதுங்கத் தொடங்கினார். லோக்சபா தேர்தலில் வேறு கூட்டணியை நோக்கி மதிமுக நகரத் தொடங்கியதையே இது காட்டுகிறது.
நடைபயணம், போராட்டம் என கடந்த 3 ஆண்டுகளாக வைகோவின் பலவித நிகழ்வுகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக வைகோவிற்கு பலவித தடைகள் விதிக்கப்படுகிறதாம்.
போலீஸ் தடை
தூத்துக்குடியில் நடைபெற்ற கட்டபொம்மன் விழாவிற்கு விருதுநகரில் இருந்த வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல் வைகோ மேற்கொண்ட மறுமலர்ச்சிப் பயணத்திற்கும் பல்வேறு தடைகள் நேரிட்டதாக மதிமுகவினர் கூறுகின்றனர்.
வைகோ கோபம்
இதனை மனதில் கொண்டுதால் திமுக ஆட்சியில் சில ஜாபர் சேட்டுகள் இருந்தது போல அதிமுக ஆட்சியிலும் சில ஜாபர் சேட்டுகள் இருக்கிறார்கள் என்று பேசினார் வைகோ.
காத்திருந்த வைகோ
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொளத்தூர் மணியை பார்க்கச் சென்ற போது வைகோவின் காருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 10 நிமிடம் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டது.
வைகோ கொதிப்பு
இதையடுத்து அதிமுக அரசை காட்டமாக விமர்ச்சிக்கத் தொடங்கியுள்ளார் வைகோ. சமீபத்தில் திவிக தலைவர் கொளத்தூர் மணி கைதுக்கு எதிராக அறிக்கை விட்ட வைகோ, தே.பா சட்டத்தில் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்ட உடன் காட்டாட்சி தர்பார், ஜெயல்லிதாவின் சர்வாதிகார வெறிப்போக்கு மாறவே இல்லை. எந்தப் படிப்பினையையும் அவர் கற்றுக்கொள்ளவில்லை என்று காட்டமாக அறிக்கை விட்டதில் இருந்தே மதிமுகவின் தற்போதைய நிலைப்பாடு தெரியவரும்.
வைகோ கைது?
இந்த நிலையில் மதிமுக தரப்பில் இருந்து நம்மிடம் பேசியவர்கள், வைகோ எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறியுள்ளனர். காரணம், லோக்சபா தேர்தலில், பாஜக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியை உருவாக்க வைகோ முயற்சி எடுத்து வருகிறார். இது ஆளும் கட்சிக்குப் பிடிக்கவில்லை. எனவேதான் அவர் மீது அடக்குமுறையை கையாளுகின்றனர். உளவுத்துறையினரும் வைகோவை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்றனர்.
கண்காணிப்பில் வைகோ
வைகோவின் செயல்பாடுகள், செல்போன், தொலைபேசி உள்ளிட்டவைகள் மட்டுமின்றி மதிமுகவின் முக்கிய நிர்வாகிகளின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகிறதாம். உளவுத்துறையின் சதியால் வைகோ ஏதாவதொரு வழக்கில் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர் மதிமுகவினர்.