தமிழர்கள் கண்ணகி கோவிலில் 3 நாட்கள் வழிபட அனுமதிக்க வேண்டும்: உம்மன் சாண்டிக்கு வைகோ கடிதம்
சென்னை: தமிழக-கேரளா எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழர்கள் 3 நாட்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேரளா முதல்வர் உம்மன்சாண்டிக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக எல்லையோரம் கம்பம், கூடலூர் கடந்து பளியங்குடி வனப்பகுதியில் சுமார் 6.6 கி.மீ. தொலைவிலும், குமுளியிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவிலும், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,380 அடி உயரத்தில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது.
மலை மீது உள்ள இக்கோவிலுக்குச் செல்ல கேரள அரசின் ஒப்புதல் பெற்ற ஜீப்புகள் மட்டுமே செல்ல இயலும். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை மாதத்தில் பவுர்ணமியையொட்டி ஒருவார காலம் விழா நடத்துவது வழக்கமாகும்.
பின்னர் கேரள மாநில வனத்துறையின் கட்டுப்பாடுகளால் அந்த விழா மூன்று நாட்களாகக் குறைக்கப்பட்டு தற்போது ஒருநாள்மட்டுமே நடைபெறும் விழாவாகச் சுருங்கி விட்டது.
இந்த வருடம் சித்திரா பவுர்ணமி 21.04.2016 அன்று வருவதால் மங்கலதேவி கண்ணகி கோவிலில் வழிபட தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களை சித்திரா பவுர்ணமியான 21.04.2016 அன்று ஒருநாள் மட்டுமே கேரள அரசு அனுமதிக்கும் என்றும், இம்முறை தமிழ்நாட்டிலிருந்து தமிழக மக்கள் வழிபட அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பதால் மூன்று நாட்கள் சென்று வழிபாடு நடத்திட கேரள அரசிடம் அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்றும் மங்கலதேவி கண்ணகி கோவில் வழிபாட்டு மன்றத்தை நடத்திவரும் யாணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி வைகோ, கேரள மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "மங்கலதேவி கண்ணகி கோவில் வழிபாடு செய்ய தமிழக மக்கள் வரும் சித்திரா பவுர்ணமி அன்று (21.04.2016) ஒருநாள் மட்டுமே வழிபாடு செய்ய அளிக்கப்படும் அனுமதிக்குப் பதிலாக ஏற்கனவே அனுமதி வழங்கியது போல தமிழக மக்கள் மூன்று நாட்கள் வழிபட அனுமதித்து உதவிட வேண்டுகிறேன் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு மதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.