களைகட்டிய வைகுண்ட ஏகாதசி திருநாள்– புத்தாண்டு தினத்தில் பெருமாள் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள்
திருச்சி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு வைணவத் திருத்தலங்களில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இதேபோல் திருப்பதி உள்ளிட்ட வைணவ திருத்தலங்கள் அனைத்திலும் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் திரண்டனர். பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் ஏகாதசி விழா கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூல ஸ்தானத்தில் இருந்து ரத்ன அங்கி, பாண்டியன் கொண்டை பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்பட்டார்.
தங்க கொடிமரத்தைச் சுற்றி, சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசலை பெருமாள் வந்தடைந்தார். அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டபோது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கத்துடன் பெருமாளை வழிபட்டனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருவல்லிக்கேணி
இதேபோல் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதற்காக 4 மாட வீதிகளிலும் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பரமபதவாசல் வழியாக வந்த பார்த்தசாரதியை திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா சரண கோஷங்களுடன் வழிபட்டனர்.
திருப்பதி
திருப்பதியில் கடும் பனிப்பொழிவு இருந்தது. இருப்பினும் பக்தர்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று காலை 4 மணியளவில் ஏழுமலையானின் சொர்க்க வாசலை தரிசனம் செய்தனர்.