மாஜி தலைமை செயலர் ஞானதேசிகன் சஸ்பெண்ட் பின்னணியில் வைகுண்டராஜன் விவகாரம்?
சென்னை: தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதன் பின்னணியில் வைகுண்டராஜன் விவகாரம் அடிபடுகிறது. வைகுண்டராஜனுக்கு எதிரான ஒரு பைலில் ஞானதேசிகன் கையெழுத்து போடாமல் இழுத்தடித்ததே சஸ்பெண்ட் ஆனதற்கு காரணம் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்தவர் கு.ஞானதேசிகன்.
2016 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று, அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்த நிலையில், கடந்த மே மாதம் தமிழக தலைமைச் செயலராக இருந்த கு.ஞானதேசிகன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக (டிட்கோ) தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக, முதல்வர் ஜெயலலிதாவின் 2ம் நிலை செயலராக இருந்த பி.ராமமோகன ராவ் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று இரவு திடீரென அவர் பணி யிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணங்கள் வெளியாகவில்லை.
கடந்த 2011-16 அதிமுக ஆட்சிக் காலத்தில் முதலில் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்ட தேபேந்திரநாத் சாரங்கி ஓய்வு பெற்றதும், ஷீலா பாலகிருஷ்ணன் தலைமைச் செயலரானார். அவர் ஓய்வு பெற்றதும் அரசு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
தலைமைச் செயலராக மோகன் வர்கீஸ் சுங்கத் நியமிக்கப்பட்டார். 2014 டிசம்பர் மாதம் திடீரென அவர் மாற்றப்பட்டு, மின்வாரிய தலைவராக இருந்த கு.ஞானதேசிகன் தலைமைச் செயலரானார். அதுமுதல் 2016ம் ஆண்டு மே மாதம் வரை கு.ஞானதேசிகன் தலைமைச் செயலராக இருந்தார்.
கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் சென்னை பாதிக்கப்பட்டதற்கு தலைமைச் செயலராக இருந்த ஞானதேசிகனின் செயல்பாடு பற்றியும் விமர்சனங்கள் எழுந்தது.
2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைந்ததும் தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன் மாற்றப்பட்டார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோவின் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
தலைமைச் செயலாளர் ஆவதற்கு முன்பு மின்வாரியத்தின் சேர்மனாக இருந்தார். அப்போது அவர் மீது நிறைய புகார்கள் எழுந்தன. அந்த விவகாரத்தை இப்போது தோண்டி எடுத்திருக்கிறார்கள்.
விவி மினரல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மணல் மனிதர் வைகுண்டராஜனுக்கு எதிராக ஒரு ஃபைல் வந்த போது அதற்கு ஞானதேசிகன் கையெழுத்து போடாமல் இழுத்தடித்தாராம். அதன் காரணமாக ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், ஜெயலலிதாவின் செயலாளர் வெங்கடரமணன் ஆகியோருக்கு இடையே நடக்கும் உள்ளடி அரசியலில் ஞானதேசிகன் பலிகடா ஆக்கப்பட்டதாகவும் ஒரு சிலர் பேசி வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் என்ன நடந்ததோ?