வைகுண்டராஜனின் வணிக வளாகத்துக்கு சீல்.. நெல்லை ஆட்சியர் அதிரடி!
அனுமதியின்றி கட்டப்பட்ட வைகுண்டராஜனின் வணிக வளாகத்துக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் சீல் வைத்துள்ளார்.
நெல்லை: வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் நிறுவனம் அனுமதி பெறாமல் 4 அடுக்கு மாடி கட்டிடம் கட்டியதால் நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் அந்த வளாகத்துக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த முருகர்குறிச்சியில் விவி மினரல்ஸ்க்கு சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த நான்கு அடுக்குமாடிக் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியும் வணிக வளாகத்தின் தரப்பில் இருந்து முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடி வணிக வளாகத்துக்கு மாவட்ட ஆட்சியர் கருணாகரன் முன்னிலையில் அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கட்டிடம் வைகுண்ட ராஜனுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.