தூத்துக்குடி அருகே வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் குடோனுக்கு அதிரடி சீல்!
தூத்துக்குடி அருகே வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் குடோன்களுக்கு மாவட்ட நிர்வாகம் அதிரடியாக சீல் வைத்துள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வைகுண்டராஜனுக்கு சொந்தமான குடோனுக்கு மாவட்ட நிர்வாகம் அதிரடியாக சீல் வைத்துள்ளது. இந்த குடோனில் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட 25 மெட்ரிக் டன் தாது மணல் உள்ளதாக கூறப்படுகிறது.
தென்மாவட்டங்களில் தாது மணலை சட்டவிரோதமாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது வைகுண்டராஜன் கும்பல். 2013-ம் ஆண்டு தாது மணல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
அதன்பின்னரும் தடையின்றி சட்டவிரோத தாது மணல் கொள்ளை கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார் நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன்.
உடனே வைகுண்டராஜன் அடியாட்கள் ஆட்சியர் கருணாகரனுக்கு எதிராக அவதூறுகளை பரப்பி நெருக்கடி கொடுத்தனர். அத்துடன் திடீரென டிடிவி தினகரனிடம் சரணடைந்து ஆட்சியாளர்கள் எங்கள் பக்கம் என காட்டிக் கொள்ள முனைந்தார் வைகுண்டராஜன்.
இந்த நிலையில் தூத்துக்குடி அருகே தங்கம்மாள்புரத்தில் வைகுண்டராஜனின் விவி மினரல்ஸுக்கு சொந்தமான குடோனுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று அதிரடியாக சீல் வைத்தது. இந்த குடோனில் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட 25 மெட்ரிக் டன் தாது மணல் உள்ளதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் வைகுண்டராஜனுக்கு சொந்தமான மேலும் 34 குடோன்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.