முன் ஜாமீன் கோரும் வைகுண்டராஜன்- கிடைக்காவிட்டால் சிபிஐ கைது செய்ய வாய்ப்பு
மதுரை: விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் மீது 2012ம் ஆண்டு சி.பி.ஐ பதிவு செய்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு முன் ஜாமீன் வழங்க சிபிஐ கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது.
இந்த வழக்கு விவரம்: தூத்துக்குடி வ.உ.சி., துறைமுக பொறுப்புக் கழக தலைவராக இருந்தவர் சுப்பையா. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவரும், குடும்பத்தினரும் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 8.23 கோடி சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது.
இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்க உதவியதாக வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோரையும் சிபிஐ சேர்த்தது.
அதாவது விருதுநகர் மாவட்டம் கரிசல்குளத்தில் உள்ள ஒரு நிலத்தை சுப்பையாவுக்கு விற்க வைகுண்டராஜன் ஒரு ஒப்பந்தம் போடுகிறார். இதற்காக கொஞ்சம் பணத்தை அட்வான்சாக தருகிறார் சுப்பையா. பின்னர் ஒப்பந்தத்தில் பிரச்சனை வந்ததாகக் கூறி அந்த நிலம் தனக்கு தேவையில்லை என்று கூறி விடுகிறார் சுப்பையா. இதையடுத்து ஒரு பெரும் தொகையை வைகுண்டராஜன் திருப்பித் தருகிறார். அதாவது அட்வான்ஸ் பணத்துக்கு வட்டி போட்டு தந்ததாகக் கூறி ரூ. 8.23 கோடி பணத்தைத் தருகிறார். இத்தனைக்கும் அந்த நிலத்தின் மொத்த மதிப்பே மிக மிகக் குறைவு தான்.
வைகுண்டராஜனின் தாது மணல் ஏற்றுமதி தூத்துக்குடி துறைமுகம் வழியாக நடந்து வரும் நிலையில், சுப்பையாவின் அட்வான்ஸ் பணத்துக்கு வட்டி என்ற பெயரில் குட்டியை பெருமளவில் போட்டு பணம் தந்துள்ளனர் வைகுண்டராஜன் அண்ட் கோ.
இது சுப்பையாவுக்கு தரப்பட்ட லஞ்சமாக சிபிஐ நினைக்கிறது. நேரடியாக பணம் தந்தால் அதை வரவு வைப்பதில் சுப்பையாவுக்கு பிரச்சனை வரும் என்பதால் இந்த நிலம், வட்டி என்ன தில்லாலங்கடி வேலையில் சுப்பையாவும் வைகுண்டராஜன் கும்பலும் இறங்கியதாக சிபிஐ நினைக்கிறது.
இது தான் வழக்கு. இதில் வைகுண்டராஜனையும் அவரது தம்பியையும் விசாரணைக்கு அழைக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. விசாரணைக்குப் போகும் இடத்தில் அப்படியே கைது செய்து கொண்டு போய்விடுவார்கள் என்பதால் வைகுண்டராஜனும் அவரது தம்பியும் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், துறைமுக பொறுப்புக் கழக தலைவராக இருந்த சுப்பையா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் சொத்து சேர்க்க நாங்கள் உதவியதாக எங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் எங்களுக்கு தொடர்பு இல்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. தொழில் ரீதியாக எங்களுக்கும் அவருக்கும் பிரச்சனை உள்ளது. காரியாபட்டி அருகே கரிசல்குளத்தில் ஒரு நிலம் விற்பனை தொடர்பாக எங்களுக்கும், துறைமுக பொறுப்புக் கழக தலைவராக இருந்த சுப்பையாவின் தாய் ஜானகிக்கும் இடையே காஞ்சிபுரத்தில் உள்ள வங்கி மூலம் 7.5 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜானகிக்கு ரொக்கமாக நாங்கள் எதுவும் வழங்கவில்லை. காசோலையாகத்தான் வழங்கினோம். இதில் ஒளிவுமறைவு எதுவும் இல்லை. வழக்கில் எங்களை தவறாக சேர்த்துள்ளனர். இதனால் முன் ஜாமீன் வழங்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன் விசாரணைக்கு வந்தது. உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சாமிநாதன் ஆஜரானார். அப்போது வைகுண்டராஜனுக்கு முன் ஜாமீன் வழங்க சிபிஐ மிகக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் முன் ஜாமீன் தரக்கூடாது என்று சிபிஐ கூறியுள்ளது.
முன் ஜாமீன் கிடைக்காவிட்டால் வைகுண்டராஜனை சிபிஐ கைது செய்யும் என்று தெரிகிறது.
இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.