ஜன.1ல் வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல்பத்து உற்சவம்
ஸ்ரீ ரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு திருமொழித் திருநாள் எனும் பகல்பத்து உற்சவம் இன்று அதிகாலை தொடங்கியது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயம். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பகல் பத்து, ராப்பத்து என, தொடர்ந்து, 21 நாள் திருவிழா நடக்கும்.
நடப்பாண்டு ஏகாதசி பெருவிழா இன்று அதிகாலை தொடங்கியது. இதையொட்டி, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் காலை 6.45 மணிக்கு புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் 7.30 மணிக்கு எழுந்தருளினார். அதன்பின் அரையர் சேவையுடன் காலை 8.15 மணி முதல் பகல் 1 மணி வரை நம்பெருமாள் அர்ச்சுனா மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் அப்போது திருமொழி பாசுரங்களை அரையர்கள் பாடினர்.
இன்று மாலை 4 மணி முதல் 5.30 மணிவரை உபயதாரர்கள் மரியாதைகளுடன் பக்தர்களுக்கு தரிசனம் அளித்த பின், மாலை 6.15 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
பகல்பத்து உற்சவத்தின் கடைசி நாளான டிசம்பர் 31ஆம் தேதி நம்பெருமாள் மோகனி அலங்காரத்தில் எழுந்தருள்வார்.
விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. பெரிய பெருமாளான மூலவர் முத்தங்கியில் பகல்பத்து, ராப்பத்து ஆகிய 20 நாட்களும் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்திற்குள் தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
25 இடங்களில் ஒலிபெருக்கிகளும் கோவிலைச்சுற்றி 7 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவசரகால ஊர்திகளும் மருந்துகளும் தயாராக உள்ளன. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.