வைகுண்டத்திற்கு வழிகாட்டும் வைகுண்ட ஏகாதசி விரதம்
சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள் சொர்கவாசல் வழியாக வந்த இறைவனை கோவிந்தா முழக்கத்துடன் தரிசித்தனர். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும். வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பவர்கள், இறந்த பிறகு நேரே வைகுண்டம் செல்வார்கள். அவர்களுக்கு மறுபிறப்பே இல்லை என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அரங்கநாதர், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலாப்பூர் மாதவபெருமாள் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் கடந்த 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை பகல்பத்து எனப்படும் திருமொழித் திருநாள் உற்சவம் நடைபெற்றது. இராபத்து உற்சவம் துவக்கமான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அனைத்து பெருமாள் கோயில்களிலும் இன்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11ம் நாள் ஏகாதசி. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி என அழைக்கப்படுகின்றன. அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்வது வழக்கம். ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.
வைகுண்ட ஏகாதசி
வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன் தரும். மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி 'முக்கோடி ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது. மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஏகாதசியை ‘வைகுண்ட ஏகாதசி' உற்சவமாகக் கொண்டாட திருமங்கையாழ்வார் ஏற்பாடு செய்தார்.
எப்படி இருக்கவேண்டும்
ஏகாதசி விரதம் இருப்பவர்கள், அதற்கு முன்தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையாக உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமையைப் பேசுவதும், விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக இருக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று காலை 21 வகை காய்கறிகளை சமைத்து உண்ண வேண்டும். இதில் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம்பெற வேண்டும்.
பகலிலும் உறங்க கூடாது
துவாதசியன்று காலையில் சாப்பிட்ட பிறகு பகலில் உறங்கக்கூடாது. விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும். ஏகாதசி விரதம் 10வது திதியாகிய தசமி, 11வதாகிய ஏகாதசி, 12ம் திதியாகிய துவாதசி என்று 3 திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும். வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பவர்கள், இறந்த பிறகு நேரே வைகுண்டம் செல்வார்கள். அவர்களுக்கு மறுபிறப்பே இல்லை என்று பக்தர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
தவிர்க்க வேண்டியவை:
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக்கூட சாப்பிடக்கூடாது. ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து, அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக் கீழான நரகத்துக்கு செல்வான். ஏகாதசி நாளில் துளசி இலைகளைப் பறிக்கக்கூடாது. தேவையான துளசிகளை முதல் நாளே பறித்து வைத்து விட வேண்டும்.
ஏகாதசி விரதம்
திதிகளில் ஏகாதசி மாதத்திற்கு இருமுறை வந்தாலும் வைகுண்ட ஏகாதசிக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு. ஏகாதசி விரதம் இருந்தால் வைகுண்டத்திற்கே வழி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதற்கு புராணத்தில் கதைகளும் உள்ளன. ஒரு காலத்தில் அம்பரீஷன் என்ற சக்கரவர்த்தி, ஏகாதசி விரதத்தை தவறாது கடைப்பிடித்தான். ஒருமுறை, ஏகாதசி முடிந்த மறுநாள் துவாதசியன்று, யமுனை நதிக்கரையில் துர்வாச முனிவரை சந்தித்தான். அவருக்கு பாதபூஜை செய்து, அவரையும் தன்னோடு உணவு உண்ண வரும்படி அழைத்தான்.
துர்வாசரின் கோபம்
யமுனையில் நீராடிவிட்டு வருவதாகச் சென்ற துர்வாச முனிவர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. அங்கிருந்த மற்ற ரிஷிகள், ‘அம்பரீஷா! துளசி தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடித்துக்கொள். துர்வாசரை விட்டு சாப்பிட்டால்தான் தவறு. தீர்த்தம் அருந்துவதில் தவறில்லை" என்று கூறினர். தன்னை எதிர்பார்க்காமல் அம்பரீஷன் மட்டும் துளசி தீர்த்தம் உண்டதைக் கேட்டு துர்வாசர் கோபம் கொண்டார். அம்பரீஷன் மீது சடைமுடி ஒன்றை ஏவிவிட்டார். அது பூதமாக உருமாறி அம்பரீஷனைத் துரத்தியது இதை அறிந்ததும் பக்தனை காப்பதற்காக, அந்தப் பூதத்தின் மீது மகாவிஷ்ணு சுதர்சனச் சக்கரத்தை எறிந்தார். அச்சக்கரம் பூதத்தையும் துர்வாசரையும் துரத்தியது. பாற்கடலுக்கு ஓடி, மகாவிஷ்ணுவிடம் தன்னை மன்னிக்குமாறு துர்வாசர் வேண்டினார்.
துன்பத்தை தாங்கும் சக்தி
துர்வாசரே! ஏகாதசி நாளில் என்னைக் குறித்து யாரொருவர் பக்தியோடு விரதம் இருக்கிறார்களோ, அவர்களுடைய இதயத்தில் நான் குடியிருக்கிறேன். அவர்களை காப்பது என் கடமை. அம்பரீஷனிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்போதுதான் சக்கரத்திடமிருந்து விடுதலை பெறுவீர்கள் என்ற பகவான் விஷ்ணு கூறவே, அம்பரீஷனிடம் தன்னை மன்னிக்குமாறு துர்வாசர் வேண்டியதோடு, அவனுக்குப் பல்வேறு வரங்களையும் தந்து அருளினார். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் எவ்வளவு பெரிய துன்பத்தையும் தாங்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்வார்கள் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.
சென்னை பெருமாள் கோவில்கள்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் உள்ளிட்ட 108 வைணவ திருத்தலங்களில் அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பெருமாள் ரத்னாங்கி சேவையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கோவிந்தா முழக்கம்
மாதவ பெருமாள் கோவிலில் சொர்கவாசல் வழியாக வந்து தரிசனம் தந்த நம் பெருமாளை கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். இதனையடுத்து பெருமாள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏகாதசி விரதம் இருந்து, சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை தரிசிப்பது சிறப்பானது என்பதால் ஏராளமானோர் பரமபதவாசல் வழியாக வந்தனர்.
இறந்தால் முக்தி
பாற்கடலில் மகாவிஷ்ணு வீற்றிருக்கும் வைகுண்ட வாசல், நல்லவர்களின் காலடி பட்டவுடன் தானே திறந்து கொள்ளும். ஏகாதசி திதியன்று மட்டும் சொர்க்க வாசல் முழுமையாக திறந்திருக்கும். ஏகாதசி திதியன்று உயிர் துறப்பவர்களும்கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால், இவர்கள் சொர்க்கத்துக்கு செல்வர்கள் என்பது நம்பிக்கை.