ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி - வைகை ரயில் 1 நிமிடம் நிற்கும்
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வைகை விரைவு ரயில் 1 நிமிடம் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி: மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமாக போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியுள்ளது.
சொர்க்கவாசல் திறப்பை காண லட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தருவார்கள். பக்தர்களின் வசதிக்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜனவரி 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வண்டி எண்.12635, சென்னை எழும்பூர்- மதுரை வைகை விரைவு ரயில், மாலை 5.48 முதல் 5.49 வரை ஒரு நிமிடம் நிறுத்தப்படும்.
அதே போல் வண்டி எண்.12636, மதுரை- சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில், காலை 9.22 முதல் 9.23 மணி வரை ஒரு நிமிடம் நிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.