வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயம் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
சென்னை: பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசி நாளை ஜனவரி 8ஆம் தேதியும் இந்த ஆண்டின் கடைசியில் டிசம்பர் மாதம் 29ஆம்தேதி என இருமுறை வருகிறது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளைய தினம் அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்க வாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சிறப்பு எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 8ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக ஏழு மலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இதில் 7ஆம் தேதி முதல் வரிசையில் காத்திருப்போருக்கு முன்னுரிமை கிடைக்கும். பக்தர்களின் நெரிசலை தவிர்க்கும் வகையில் நாராயணகிரி பகுதியில் கூடுதல் ஷெட்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயிலில், பகல் பத்து, இராப்பத்து என 21 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு வைபவம் நாளை ஞாயிறு காலை அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயிலில், பகல் பத்து, இராப்பத்து என 21 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு வைபவம் நாளை ஞாயிறு காலை அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள்
இதனையொட்டி, ரேவதி மண்டபம், மணல்வெளி, ஆயிரங்கால் மண்டபம், பரமபத வாசல் உள்ளிட்ட இடங்களில் அலங்கார வளைவுகள் மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், 4 ஆயிரத்து 500 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
வீரராகவ பெருமாள்
ஏகாதசியை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு தனுர் மாத பூஜைக்கு பின் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவர் காலை 5 மணிக்கு உள் புறப்பாடு நடைபெறும்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவில் மயிலாப்பூரில் உள்ள மாதவ பெருமாள் கோவில், கேசவ பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு நாளை அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றத்தில் வைகுண்ட ஏகாதசி
திருப்பரங்குன்றம் கோவிலில் மாதகார்த்திகை மற்றும் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் கருவறையில் உள்ள பவளக்கனிவாய் பெருமாள் தான் மதுரை மீனாட்சிஅம்மனுக்கு அண்ணனாக இருந்து தாரை வார்த்து கொடுத்து மீனாட்சி அம்மன், சுந்தரரேசுவரர் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
பெருமாள் தரிசனம்
இத்தகைய சிறப்புமிக்க பவளக்கனிவாய் பெருமாள் வீற்றிருப்பதால் திருப்பரங்குன்றம் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. பொதுவாக பெருமாள் கோவில்களில் அடைக்கப்பட்டு இருக்கும் பரமபத வாசல் ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும். ஆனால் இங்கு ஆண்டுதோறும் திறந்து இருக்ககூடிய பெரிய கதவு ஒருமணிநேரத்திற்கு முன் அடைக்கப்பட்டு அதன் பிறகு திறந்து அந்த வழியாக பெருமாள் எழுந்தருள்வது குறிப்பிடத்தக்கது.