ஆண்டாள் பற்றிய சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த வைரமுத்து!
ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதாக கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்த நிலையில், வைரமுத்து இவ்விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: இந்துக்கள் மனம் புண்படும் வகையில் பேசியதாக கவிஞர் வைரமுத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், வைரமுத்து ஆண்டாள் விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் நேற்று ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து பேசிய சில கருத்துகள் சர்ச்சையக்குரியதாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து வைரமுத்து விளக்கிய விதத்தால் கருத்தரங்கில் இருந்தவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்தனர்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள வைரமுத்து, ஆளுமைகளை மேன்மைபடுத்துவதே இலக்கியத்தின் நோக்கமின்றி சிறுமை செய்வதன்று என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஆண்டாள் பற்றிய தன் கருத்துகள் எல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுவதாக கூறிய அவர், ஆண்டாள் பற்றி இண்டியானா பல்கலைகழகத்தின் ஆய்வு நூலில் கூறிய ஒரு வரியையே மேற்கோள் காட்டியதாக விளக்கமளித்துள்ளார். ஆண்டாள் விவகாரத்தில் எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று என்று கூறிய அவர், புண்பட்டிருந்தால் வருந்தம் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.