மறைந்தாலும் எழுத்துகளில் வாழ்வார் பாலகுமாரன்... வைரமுத்து உருக்கம்
எழுத்தாளர் பாலகுமாரன் மறைந்தாலும் எழுத்துகளில் வாழ்வார் என கவிஞர் வைரமுத்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: எழுத்தாளர் பாலகுமாரன் மறைந்தாலும் எழுத்துகளில் வாழ்வார் என்றும் அவரது மறைவை கனத்த இதயத்தோடு பார்க்கிறேன் என்றும் கவிஞர் வைரமுத்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பாலகுமாரன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 71.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் பாலகுமாரன் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
அவரது மறைவு இலக்கிய துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு என கவிஞர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
எழுத்துகளில் வாழ்வார்
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, பாலகுமாரன் மறைந்தாலும் எழுத்துகளில் வாழ்வார். பாலகுமாரன் மறைவை கனத்த இதயத்தோடு பார்க்கிறேன்.
பெண்கள் குறித்த புரிதல்
தன் கடைசி மூச்சுவரை தனது பேனாவை நிறுத்தாத எழுத்தாளர் பாலகுமாரன். பெண்கள் குறித்த புரிதல்கள் பாலகுமாரனின் எழுத்துக்களில் உள்ளன.
நீண்ட நாட்கள் வாசிக்கப்படும்
பாலகுமாரனின் ரசிகர் வட்டம் மிகப் பெரியது. பாலகுமாரன் எழுத்துக்கள் நீண்ட நாட்கள் வாசிக்கப்படும். இவ்வாறு கவிஞர் வைரமுத்து உருக்கமாக கூறியுள்ளார்.
ஒரு தடவ சொன்னா..
எழுத்தாளர் பாலகுமாரன், நாயகன், பாட்ஷா, ஜீன்ஸ், குணா உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ரஜினியின் நான் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்னா மாதிரி என்ற புகழ்பெற்ற டயலாக்குக்கு சொந்தக்காரர் பாலகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.