அடிப்படை பிரச்சினைகளில் இருந்து தமிழர்கள் கவனம் திசை திருப்பப்படுகிறதா?
Recommended Video
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எது மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறவேண்டுமோ அதை தவிர்த்து பிற விஷயங்கள் அதிகமாக விவாதப்பொருளாகி வருகின்றன.
கடந்த ஒரு வாரமாக ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் சர்ச்சை பேச்சு வாத, விவாதங்களுக்கு காரணமான நிலையில், இன்று முதல் விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வைரமுத்துவிற்கு எதிராகவும், அவரை நாகரீகம் இல்லாமல் பேசிய எச்.ராஜாவுக்கு எதிராகவும், போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்ததை போல, இப்போது விஜயேந்திரருக்கு எதிராக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
விடாத நெருப்பு
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், வைரமுத்து தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பிறகும் அந்த விஷயம் அடங்கவில்லை. இரண்டு விவகாரங்களும் கடந்த ஒரு வாரமாக சோஷியல் மீடியாக்களை சூடாகவே வைத்துள்ளன.
எல்லை தாண்டுகிறதே
ஆண்டாள், தமிழ்த் தாய் வாழ்த்து பிரச்சனைகள் இரண்டும் உணர்வுப்பூர்வமானவை என்பதால் அது சர்ச்சைகளுக்கு காரணமானது. இருப்பினும், இந்த சர்ச்சைகள் எல்லையை தாண்டி சென்று கொண்டே உள்ளன என்பதுதான் உன்னிப்பாக நோக்கப்பட வேண்டிய விஷயம்.
மக்கள் பிரச்சினை
இதே காலகட்டத்தில்தான் வரலாறு காணாத பஸ் கட்டண உயர்வு மக்களை பாதித்துக்கொண்டுள்ளது, இதே காலகட்டத்தில்தான் வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை வாட்டிக்கொண்டுள்ளது. ஆண்டாள், தமிழ்த்தாய் விவகாரங்களை போலவே ஏன் அதைவிட மிக அதிகமான வீரியத்தோடு விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள் இவ்விரண்டும்தான். இரண்டுமே ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்து மக்களின் வயிற்று பிழைப்புடன் தொடர்புள்ளவை. ஆனால் ஊடகங்களும், சமூக ஊடகங்களும் வேறு விஷயங்களில் மட்டுமே கவனத்தை குவிக்க பழக்கப்பட்டுள்ளன. இது யதேர்ச்சையாக நடக்கிறதா, அல்லது வேண்டுமென்றே ஊதிப்பெரிதாக்கப்படுகிறதா என்பது இப்போதுள்ள சூழலை வைத்து பார்க்கும்போது பலருக்கும் எழும் ஐயம்.
ஆள்பவர்களுக்கு நிம்மதி
ஒன்று மட்டும் உறுதி. தமிழகத்தில் நடந்துவரும் அதிதீவிர சில சர்ச்சைகள், மத்தியிலும், மாநிலத்திலும் ஆள்பவர்களுக்கு பெரும் நிம்மதி தருபவை. வைரமுத்து, நித்யானந்தா சீடர்கள், விஜயேந்திரர் என தமிழர்கள் கவனம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கே பஸ் கட்டணங்களும், அத்தியாவசிய பொருட்கள் விலையும் நைசாக விண்ணை தொட்டுக்கொண்டுள்ளன.
களமிறங்கிய மாணவர்கள் கவனம் சிதறுகிறதே
ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் களமிறங்கிய நேரத்தில், திடீரென அவர்கள் கவனம், கலாச்சாரம், பண்பாடு பக்கமாக இழுத்துச் செல்லப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. இவ்விரண்டும் முக்கியமானவை என்றபோதிலும், மாணவர் புரட்சிக்கு பணிந்த அரசு பஸ் கட்டணம் தொடர்பாக சில சலுகைகளை அறிவிக்க தொடங்கிய நிலையில், மீண்டும் பாதை மாறி மக்கள் பயணிப்பது ஆள்பவர்களுக்கு வசதிதான்.