வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க ஹைகோர்ட் அதிரடி தடை!
ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் சர்ச்சைக் கருத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
Recommended Video
சென்னை: ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் சர்ச்சைக் கருத்து தொடர்பான வழக்குகளின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக வைரமுத்துவை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.
இந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளும் வைரமுத்துவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வந்தனர். பல இடங்களில் வைரமுத்து மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
வழக்கை ரத்து செய்யக்கோரி மனு
இந்நிலையில் தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரமுத்து மனுத்தாக்கல் செய்தார். சென்னை கொளத்தூர் காவல்நிலையத்தில் முருகானந்தம் என்பவர் தொடர்ந்த வழக்கில் வைரமுத்து இந்த மனுவை தாக்கல் செய்தார்.
வைரமுத்து வக்கீல்
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமெரிக்கா ஆராய்ச்சியாளர் கட்டுரையைதான் வைரமுத்து சுட்டிக்காட்டியதாக அவரது தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
குற்றச்சாயம் பூசுகிறார்கள்
மேலும் ஆண்டாள் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க போராடினார் என்றே வைரமுத்து பேசினார் என்றும் அவர் வாதிட்டார். மேலும் ஆராய்ச்சியாளரின் கட்டுரைக்கு குற்றச்சாயம் பூசுவதாகவும் அவர் புகார் கூறினார்.
சொந்தக்கருத்து அல்ல
விஹெச்பி மற்றும் அரசியல் கட்சிகளே இந்த விவகாரத்தை பெரிதாக்கி உள்ளன என்றும் வைரமுத்துவின் வக்கீல் வாதாடினார். மேலும் வைரமுத்து கூறியது அவரது சொந்தக் கருத்து அல்ல என்றும் வைரமுத்துவின் வக்கீல் நீண்ட வாதத்தை முன்வைத்தார்.
சென்னை ஹைகோர்ட் அதிரடி
இதனைக் கேட்ட நீதிமன்றம் வைரமுத்து கூறிய கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்றும் தெரிவித்தது. ஆண்டாள் பற்றி ஆராய்ச்சி கட்டுரையைத்தான் வைரமுத்து மேற்கோள் காட்டியுள்ளார் என்றும் சொந்த கருத்தை வைரமுத்து கூறவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
ஹைகோர்ட் நீதிபதி கேள்வி
வைரமுத்து கூறியதை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் கேள்வி எழுப்பினார். ஒரு தரப்பு வாதம் மட்டும் நிறைவடைந்த நிலையில் வைரமுத்துவின் மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஹைகோர்ட் தடை
பிற்பகலில் மீண்டும் விசாரணையை தொடங்கிய ஹைகோர்ட் ஆண்டாள் தொடர்பான வைரமுத்துவின் கருத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனக்கூறி அவர் மீது காவல்நிலையங்களில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.
பிப்.16க்கு ஒத்திவைப்பு
வைரமுத்துவின் கோரிக்கையை ஏற்று சென்னை ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி 16ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.