23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் - சாகித்ய அகாதமி அறிவிப்பு!
கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம் 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதாக சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது.
வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வகதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு அது.
வட்டார வழக்கோடு எழுதப்பட்ட உலகத் தன்மை கொண்ட அந்த நாவல் 2003ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. இதுவரை 1லட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனையாகி நாவல் உலகத்தில் பெரும் சாதனை செய்திருக்கிறது.
லண்டனில் நிகழ்ந்த அதன் அறிமுக விழாவில் இங்கிலாந்து நாட்டு அந்நாள் கல்வி அமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ் மற்றும் லண்டன் மாநகர அந்நாள் மேயர் ராபின் வேல்ஸ் இருவரும் கலந்துகொண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
தமிழில் வெளியான இந்த நாவலை இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் கொண்டுசெல்ல சாகித்ய அகாடமி முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஆங்கிலம், அஸ்ஸாமி, வங்காளி, போடா, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, ராஜஸ்தானி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தெலுங்கு, உருது ஆகிய 23 மொழிகளில் மொழிபெயர்க்க சாகித்ய அகாடமி முடிவெடுத்திருக்கிறது.
மொழிபெயர்ப்புப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று சாகித்ய அகாடமியின் செயலாளர் சீனிவாசராவ் கவிஞர் வைரமுத்துவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
"இந்த மொழிபெயர்ப்பு முயற்சி தமிழுக்கும் இந்திய மொழிகளுக்கும் இடையே கட்டப்படும் கலாசாரப் பாலமாகும். மொழிபெயர்ப்பு முடிந்ததும் அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் அறிமுகவிழா நடத்தப்படும்," என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.