திரிஷா.. இல்லைன்னா நயன்தாரா.. ஓ.பி.எஸ் இல்லாட்டி ஒரத்தநாடு வைத்திலிங்கம்!
சென்னை: ஓ.பன்னீர் செல்வம்.. ஒரு காலத்தில் ஓஹோவென வாழ்ந்த பெயர்.. இன்று ஓரம் கட்டப்பட்ட நிலையில் முடங்கி விட்டார் ஓ.பி.எஸ். இன்று அவரது இடத்திற்கு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறார் வைத்திலிங்கம். திரிஷா இல்லைன்னா நயன்தாரா என்ற "சொலவடை" போல ஓ.பன்னீர் செல்வம் இல்லாட்டி என்ன, அவரது இடத்திற்கு வைத்திலிங்கம் இருக்காரே என்ற நிலை அதிமுகவில் ஏற்பட்டுள்ளது.
வைத்திலிங்கத்திற்கு இந்த திடீர் உயர்வு ஏற்பட என்ன காரணம் என்று கேட்டால்.. ரொம்ப சிம்பிள்.. அடக்கமோ, அடக்கமாக இருக்கிறார். அதுதான் காரணம் என்ற பதில் வருகிறது. இருக்காதே பின்னே.. ஐவர் அணியிலிருந்து தூக்கி வீசப்பட்ட இவருக்கு சட்டசபைத் தேர்தலில் சீட் கிடைத்தது. அதில் தோற்ற அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்து இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார் ஜெயலலிதா.
அது மட்டுமே அடுத்தடுத்து அவரைத் தேடி பதவிகள் தேடி ஓடி வந்து கொண்டுள்ளன. இதைப் பார்த்து அதிமுகவினர் ஆச்சரியப்படுகிறார்கள். அவர்களின் கண்களுக்கு தற்போது வைத்திலிங்கம்தான், ஓபிஎஸ் போலத் தெரிகிறாராம்.
ஒரத்தநாடு
ஒரத்தநாடு தொகுதியில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட வைத்திலிங்கம் அங்கு திமுகவிடம் தோற்றார். இதனால் பெரும் சோகமாக இருந்தார். ஆனால் அவரை அழைத்த ஜெயலலிதா ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடச் சொன்னபோது அவராலேயே நம்ப முடியவில்லை. கட்சியினரும் ஜெர்க் ஆகினர்.
விடாத பதவிகள்
மேலும் அவர் ஏற்கனவே வகித்து வந்த தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர், அமைப்புச் செயலாளர் ஆகிய பதவிகளையும் ஜெயலலிதா பறிக்கவில்லை. அவரையே நீடிக்க விட்டுள்ளார்.
நம்பிக்கை நாணயம்.. அதுதானே எல்லாம்!
உண்மையில் ஓ.பன்னீர் செல்வம் போலவே விசுவாசத்திற்கும், நம்பிக்கைக்கும் பெயர் போனவர். அதை ஓ.பி.எஸ். இடையில் கெடுத்துக் கொண்டாலும் கூட வைத்திலிங்கம் கொஞ்சம் அந்த குட்புக்கிலிருந்து இறங்கவே இல்லையாம். இதுதான் ஜெயலலலிதா இவருக்கு தேடித் தேடி பதவி தர காரணம் என்கிறார்கள் அதிமுகவினர்.
அது மட்டுமா
ஜெயலலிதா மட்டுமல்லாமல் சசிகலாவின் குட்புக்கிலும் இருக்கிறாராம் வைத்திலிங்கம். இப்படி ஒரே நேரத்தில் இருவரிடமும் விசுவாசமாக இருப்பதன் மூலம் எந்த வகையிலும் இறங்கி விடாமல் ஸ்டெடியாக போய்க் கொண்டிருக்கிறதாம் வைத்திலிங்கத்தின் அரசியல் "கிராப்".
எப்படியோ ஓபிஎஸ் இல்லைன்னா என்ன வைத்திலிங்கம் இருக்காரே என்று அதிமுக தலைமைக்கு ஆறுதலாக வந்து சேர்ந்துள்ளார் வைத்திலிங்கம்.. இப்ப சொல்லுங்க திரிஷா இல்லாட்டி நயன்தாரா... ஓ.கேதானே!