வைத்திலிங்கம் எம்பி கொடும்பாவி எரிப்பு.. தினகரன் ஆதரவாளர்கள் சென்னையில் போராட்டம்
எடப்பாடி பழனிச்சாமியின் அணியில் உள்ள வைத்திலிங்கம் எம்பியின் கொடும்பாவி தீயிட்டு எரித்து தினகரன் ஆதரவாளர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர்.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என்று சொன்ன வைத்திலிங்கம் எம்பியின் கொடும்பாவியை தினகரன் ஆதரவாளர்கள் சென்னையில் இன்று தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடத்தினர்.
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் கடந்த திங்கள் கிழமை ஒன்று சேர்ந்தன. இந்த இணைப்பின் மூலம் சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினர் அதிமுவில் இருந்து முற்றிலுமாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியால் நியமிக்கப்பட்ட வைத்திலிங்கம் எம்பி, பொதுக் குழு கூட்டப்பட்டு சசிகலா விரைவில் நீக்கப்படுவார் என்று தெரிவித்தார். இதனால் சசிகலா ஆதரவாளர்கள் கொதித்தெழுந்தனர்.
அதனையடுத்து, தமிழகத்தின் பல பகுதிகளில் வைத்திலிங்கத்திற்கு எதிராகத் தினகரன் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் போராட்டம் நடைபெற்றது.
சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டின் முன் ஒன்று கூடிய அவரது ஆதரவாளர்கள், வைத்திலிங்கம் மற்றும் புதுச்சேரி பொறுப்பாளர் ஓம் சக்தி சேகர் ஆகிய இருவரது கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது, தினகரன், சசிகலா மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்புவதாக வைத்திலிங்கம் மற்றும் ஓம்சக்தி சேகர் மீது அவர்கள் குற்றம்சாட்டி, கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.