இன்று சென்னை வருகிறது வாஜ்பாய் அஸ்தி.. தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கப்படுகிறது!
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது.
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி இன்று சென்னை கொண்டு வரப்பட்டு தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 17-ந்தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் டெல்லியில் ஸ்மிரிதி ஸ்தல்லில் தகனம் செய்யப்பட்டது.
வாஜ்பாய் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகள் மற்றும் கடல்களில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹரித்துவார் கங்கை
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் அஸ்தி, உத்தரகண்ட் மாநிலம் ஹிரித்துவாரில் கங்கையில் நேற்று கரைக்கப்பட்டது. ஹரித்துவாரில் உள்ள பன்னாலால் பாலா கல்லூரியில் இருந்து, வாகனத்தில் ஊர்வலமாக வாஜ்பாயின் அஸ்தி கொண்டு செல்லப்பட்டது.
ராஜ்நாத் சிங், அமித்ஷா, உபி முதல்வர்
முன்னதாக, அஸ்தியை, அவரது வளர்ப்பு மகள் நமிதாவும், பேத்தி நிகாரி உள்ளிட்ட குடும்பத்தினரும் ஹெலிகாப்டரில் எடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர், அஸ்தி கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் பயணித்தனர்.
கங்கையில் கரைப்பு
இது, அங்குள்ள பிரேம் ஆஸ்ரமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன்பின்னர், கங்கை நதியில் கரைக்கப்பட்டது. இந்நிலையில் வாஜ்பாயின் அஸ்தி இன்று தமிழகம் கொண்டுவரப்படுகிறது.
6 இடங்களில் கரைக்க முடிவு
அஸ்தி கலசத்தை எடுத்து வருவதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். தமிழகத்தில் 6 இடங்களில் வாஜ்பாயின் அஸ்தியை கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி காவிரி
சென்னையில் அடையாறு கடலில் கலக்கும் இடம், மதுரையில் வைகை ஆறு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆறு, கோவையில் பவானி ஆறு, கன்னியாகுமரி கடல், ராமேஸ்வரம் கடல் ஆகிய இடங்களில் கரைக்கப்படும் என கூறப்படுகிறது.