அண்ணாவின் அன்பு நண்பர்.. கருணாநிதியின் ஆருயிர் தோழர்.. மறக்க முடியாத வாஜ்பாய்!
சென்னை: குறைந்த காலமே பிரதமர் பதவியை வகித்தாலும் நிறைவான பணியினை செய்தவர் வாஜ்பாய்.
அணு ஆயுத நாடாக இந்தியாவின் பெயரை உலகையே உச்சரிக்க செய்தவரும், 40 ஆண்டு அரசியல் அனுபவத்தை பெற்றவருமான வாஜ்பாயின் மனம் பலர் அறியாதது. குறிப்பாக தலைவர்களுடனான நட்பு, அதிலும் தமிழக தலைவர்களுடனான நட்பு அரசியல் கடந்து பிரகாசித்தது. இது நாடு முழுக்க உள்ள தலைவர்கள் ஏற்றுக் கொண்ட உண்மை.
அதில் முக்கியமானவர் அறிஞர் அண்ணா. இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். வாஜ்பாய் ஹிந்தியில் பேசினால் அண்ணா மிகவும் ரசித்து கேட்பாராம். 1965-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு விவாதத்தில், அண்ணா சொல்கிறார், "என் நண்பனின் மொழியின் இனிமையை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்" என்று சொன்னார்.
"அண்ணாவின் நினைவாக"
அதேபோல, வாஜ்பாய்-க்கு கவிதைகள் எழுதும் ஆர்வம் அதிகம் உள்ளது என்று தெரியும். ஒருமுறை வாஜ்பாய் கவிதை தொகுப்பு ஒன்றினை வெளியிட்டார். அதனை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும்போது, "எனது ஆரூயிர் நண்பரும், மதிப்பிற்குரியவருமான அண்ணாவின் நினைவாக" என்று சொல்லியே தனது கவிதை தொகுப்பினை அர்ப்பணித்தார். அந்த அளவுக்கு இருவருக்குள்ளும் அன்பு மற்றும் இலக்கிய ரீதியான நட்பு நிலவியது.
கருணாநிதி கைது
இதேபோன்ற நட்புதான் கருணாநிதி மீதும் வாஜ்பாய் செலுத்தினார். கருணாநிதி வாஜ்பாயை பற்றி அடிக்கடி சொல்லும் வார்த்தை என்ன தெரியுமா? "தவறான மரத்தில் முளைத்த நற்கனி" இதுதான் அந்த வாசகம். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கருணாநிதியை விடிகாலையில் கைது செய்து இழுத்து செல்லப்பட்ட சம்பவம் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தார் வாஜ்பாய்.
அதிருப்தியில் வாஜ்பாய்
இந்த செயலை "ஜனநாயகத்தை மீறிய செயல், தனிப்பட்ட விரோதம் காரணமாக பழிவாங்கும் நடவடிக்கைகளில் அதிமுக அரசு ஒருபோதும் இறங்க கூடாது. கருணாநிதியின் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும்" என்று தனது அதிருப்தியை வெளியிட்டார். நீண்ட காலத்திற்கு வாஜ்பாயால் இந்த சம்பவத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.
வளைந்து கொடுக்காத வாஜ்பாய்
அவ்வளவு எதற்கு? 1998-ம் ஆண்டு வாக்கில், திமுக ஆட்சியை கலைக்க பல கோரிக்கைகளை வாஜ்பாயிடம் ஜெயலலிதா அடுக்கினார். ஆனாலும் வாஜ்பாய் அசைந்து கொடுக்கவில்லையே! அவ்வளவு உறுதியாக இருந்து திமுகவுக்கு மறைமுக பலமாக இருந்தார். திராவிட கட்சிகளுக்கும், பாஜகவுக்கும் எவ்வளவோ வேறுபாடுகள், முரண்பாடுகள், சித்தாந்தங்கள் மாறுபட்டு உள்ளன. இது காலகாலமாகவே நீடித்து வரும் ஒரு நிலை.
நட்பு கனிந்து இனித்தது
ஆனாலும் தமிழக தலைவர்களுடன் வாஜ்பாயின் நட்பு கனிந்து இனித்தது. அதனால்தானோ என்னவோ, ஈழத்தமிழர் பிரச்சனையாகட்டும், சேது சமுத்திர கால்வாய் திட்டமாகட்டும் வாஜ்பாய் மிக சாதுர்யமாகவும், நயமாகவும் அவ்விவகாரங்களை கையாண்டார். இந்திய அரசியலில் வாஜ்பாய் பதித்த அழுத்தமான கால்தடம் என்றுமே மாறாது.. மறையாது...மங்காது.