அக்னி சட்டி எடுத்தும் வளர்மதி, கோகுல இந்திராவை ஆத்தா கை விட்டுருச்சே...
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பெண் அமைச்சர் கோகுல இந்திரா தோல்வியை தழுவினார். அதேபோல ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வளர்மதியும் தோல்வியடைந்தார்.
அதிமுகவில் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டார் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் பா.வளர்மதி. இவர்கள் இருவரும் அதிமுகவின் முக்கிய பெண் அமைச்சர்கள். இந்த தொகுதிகளின் சிட்டிங் எம்.எல்.ஏக்களாகவும் இருவரும் உள்ளனர். இவர்களுக்கு எதிராக திமுக சார்பில் வலுவான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
இன்று வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் கு.க. செல்வம், அண்ணாநகர் திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் ஆகியோர் மிகவும் வலுவான நிலையில் இருந்தனர். அமைச்சர்கள் வளர்மதியும், அமைச்சர் கோகுல இந்திராவும் பின்னடைவை சந்தித்து வந்தனர்.
கோகுல இந்திரா தோல்வி
இந்த நிலையில் அண்ணாநகர் தொகுதியில் அமைச்சர் கோகுல இந்திரா தோல்வியடைந்தார். திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் வெற்றி பெற்றார். அண்ணாநகர் தொகுதியில் அதிகம் வெற்றி பெற்ற கட்சி என்ற பெருமை திமுகவையே சேரும். அங்கு திமுக தலைவர் கருணாநிதி 2 முறையும், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஒருமுறையும், திமுக முன்னாளர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
திமுக வெற்றி
கடந்த முறை நடந்த தேர்தலில் முதல்முறையாக அண்ணாநகர் தொகுதியை அதிமுக கைப்பற்றியது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட கோகுல இந்திரா எம்எல்ஏ ஆனார்.அவருக்கு அமைச்சர் பதவி வழங்கி அதிமுக தலைமை கவுரவித்தது. சிட்டிங் எம்.எல்.ஏவாக அண்ணாநகரில் களமிறங்கிய கோகுல இந்திரா இம்முறை தோல்வியை தழுவியுள்ளார்.
வளர்மதி தோல்வி
ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி 3154 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். திமுகவை சேர்ந்த கு.க.செல்வம் வெற்றிப் பெற்றார்