பெரியார் விருதுக்கு ஏன் தேர்வு? மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பதிலடி கொடுத்த பா. வளர்மதி
பெரியார் விருதுக்கு தம்மை தேர்வு செய்ததை விமர்சிக்கும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் வளர்மதி.
சென்னை: தமிழக அரசின் தந்தை பெரியார் விருதுக்கு தம்மை தேர்வு செய்ததை சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழக அரசின் தந்தை பெரியார் விருது பா. வளர்மதிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தீச்சட்டி ஏந்திய பா. வளர்மதியின் படத்தைப் போட்டு இவருக்கா பெரியார் விருது என மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
இன்று சென்னையில் தமிழக அரசின் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றிய பா. வளர்மதி கூறியதாவது:
பெரியார் விருது எனக்கு அறிவிக்கப்பட்ட உடன் சமூக வலைதளங்களில் சில கேலிச் சித்திரங்களைப் பார்த்தேன். அந்த கேலிச் சித்திரங்களில் தினம்தோறும் கோவிலுக்குப் போகும் வளர்மதிக்கு பெரியார் விருதா? என கேட்கப்பட்டிருந்தது.
இந்த சித்திரங்களை பரப்புகிறவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும். 9 வயதில் எங்கள் கிராமத்தில் தந்தை பெரியார் முன் என் மேடைப் பேச்சு தொடங்கியது. இன்று தந்தை பெரியார் பெயரிலான விருதை நான் பெறுவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை.
தந்தை பெரியார் முன்வைத்தது கடவுள் மறுப்பு மட்டுமல்ல. தந்தை பெரியாரின் 2-வது முக்கிய கொள்கை பெண்ணுரிமை. அதனால்தான் பெண்ணாகிய என்னை பெரியார் விருதுக்கு தேர்வு செய்துள்ளார்கள்.
இவ்வாறு பா. வளர்மதி விளக்கம் அளித்தார்.