கந்து வட்டியை விட்டுட்டாங்க... மதுரை அன்புச் செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக மட்டும் வழக்கு!
சென்னை: சினிமா பைனான்சியரும் தயாரிப்பாளருமான மதுரை அன்புச் செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்டிக் கொடுமை பற்றி எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
சினிமாவில் ஏற்பட்ட நஷ்டம், அதற்காக வாங்கிய கடன், பைனான்சியர் அன்புச் செழியனின் சித்திரவதை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தனது தற்கொலைக் கடிதத்தில் அசோக்குமார் தெரிவித்துள்ளார். இவர் இயக்குநர், தயாரிப்பாளர் சசிகுமாரின் அத்தை மகன் மற்றும் சசிகுமார் கம்பெனியின் மேனேஜர். சசிகுமார் தயாரிக்கும் படங்களின் இணைத் தயாரிப்பாளரும் இவர்தான்.
சினிமா பைனான்சியர், விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவை ஆட்டுவிக்கும் மதுரை அன்புச் செழியனின் வட்டி சித்திரவதை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக அசோக்குமார் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இதன்பேரில் மதுரை அன்புச் செழியனைக் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு இயக்குநர் சசிகுமார், அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் இன்று மாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட வளசரவாக்கம் போலீசார், அசோக்குமாரை தற்கொலைக்குத் தூண்டியதாக இபிகோ 306வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில்தான் கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தங்களைத் தாங்களே கொளுத்திக் கொண்டு மாய்ந்து போனார்கள். அந்த கொடுமையின் அவலம் தீரும் முன்பே, தமிழ் சினிமாவில் பிரபலமான ஒருவரின் மேனேஜர் அதே வட்டிக் கொடுமையால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டுள்ளார். ஆனால் இதனை கந்து வட்டி ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல், தற்கொலைக்குத் தூண்டிய பிரிவின் கீழ் மட்டும் பதிவு செய்துள்ளனர் போலீசார்.
இதற்கான முதல் தகவல் அறிக்கையை நாளை காலை 9 மணிக்குள் தருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மதுரை அன்பு எங்கிருக்கிறார், அவரை எப்போது கைது செய்வார்கள் என்பது குறித்து எந்தத் தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை. ஆனால் நாளைக்கும் அன்புச் செழியன் கைதாவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.