மழை ஓய்ந்தும் 15 நாட்களாக தண்ணீரில் மிதக்கும் வளசரவாக்கம் தெருக்கள்- நோய் பரவும் அபாயம்
சென்னை: மழை நின்று ஒருவார காலமாகியும், வளசரவாக்கத்தில் உள்ள வாணி நகர், சவுத்திரி நகர், அம்பேத்கர் நகர், அன்பு நகர், கங்கா நகர், கந்தசாமி நகர் ஆகிய பகுதிகளில் வீடுகள் மற்றும் நிறுவனங்களை சூழ்ந்துள்ள வெள்ளநீர் இன்னமும் வடியவில்லை. கே.கே.நகர் ராஜமன்னார் சாலை முதல் வன்னியர் தெரு வழியாக வளசரவாக்கம் ஆற்காடு சாலை வரை இந்த வெள்ளநீர் கழிவு நீருடன் கலந்து சாலை முழுவதும் ஓடுவதால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் ஆபத்து உருவாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி அதிகாலை வரை கிட்டத்தட்ட 40 மணிநேரம் விடாமல் கொட்டித்தீர்த்த மழையாலும், சென்னையே வெள்ளக்காடானது. ஏரிகள், நீர்நிலைகள் நிரம்பி வழிய, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பல ஆயிரம் கன அடிநீர் திறந்து விடப்பட்டதாலும் சென்னை நகரம் மிதந்தது. லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். வீடுகளை விட்டு முகாம்களில் குடியேறினர்.
சில தினங்களில் பல பகுதிகளில் வெள்ளம் வடியத்தொடங்கியது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடிந்து விட்டது. இதனால் குவிந்துள்ள குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால் வளசரவாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை.
வடியாத வெள்ளம்
கே.கே.நகர், விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம் பகுதிகளில் மழை வெள்ளத்துடன் சாக்கடை நீரும் கலந்து வடிய வழியில்லாமல் தேங்கி நிற்கிறது.
இதில் கே.கே.நகர் ராஜ மன்னார் சாலையில் கழிவுநீர் கலந்த வெள்ளம் ஓடிக்கொண்டிருப்பதால் அங்கு போக்குவரத்து முடங்கியுள்ளது.
15 நாட்களாக தவிப்பு
வளசரவாக்கம் வாணி நகர், சவுத்திரி நகர், அம்பேத்கர் நகர், அன்பு நகர், கங்கா நகர், கந்தசாமி நகர் ஆகிய பகுதிகளில் வீடுகள் மற்றும் நிறுவனங்களை சுற்றி சூழ்ந்த வெள்ளம் 15 நாட்களாகியும் இன்னமும் வடியவில்லை. கடந்த நவம்பர் மாதம் பெய்த மழை நீரே வடியாமல் நிறம் மாறி துர்நாற்றம் வீசிய நிலையில் புதிதாக வந்த மழை நீரும் இணைந்து வெள்ளமாக தேங்கியுள்ளது.
வாகனங்கள் தத்தளிப்பு
கே.கே.நகர் ராஜமன்னார் சாலை முதல் வன்னியர் தெரு வழியாக வளசரவாக்கம் ஆற்காடு சாலை வரை இந்த வெள்ளநீர் சாக்கடையுடன் கலந்து சாலை முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் தத்தளிக்கின்றன.
நோய் பரவும் ஆபத்து
ஆழ்வார்திருநகர் மீனாட்சி நகரிலும் இன்னும் வெள்ளம் வடியவில்லை. மதுரவாயல் பகுதியிலும் சில இடங்களில் இன்னும் வெள்ளம் தேங்கி நிற்கிறது.
இந்த வெள்ளம் தேங்கிய பகுதிகளில் தண்ணீர் கறுப்பாக மாறியதோடு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளநீரை வெளியேற்றுவார்களா?
வயிற்றுப் போக்கு வாந்தி பேதியால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதால் அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வளசரவாக்கம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.