ஹரித்துவாரில் ஆகஸ்ட் 2 ல் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும்: ஹரிஷ் ராவத்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மேளா பவன் பகுதியில் ஆகஸ்ட் 2 ம் தேதி திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முயற்சி செய்தார். கடந்த 29-ந் தேதி ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட விழாவில் சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், சாதுக்களின் கடும் எதிர்ப்பால், பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக நிறுவப்பட்டது. ஆனால், அங்குள்ள பூங்கா ஒன்றில் கறுப்பு நிற கவரால் சுற்றி, கட்டப்பட்ட நிலையில், கேட்பாரற்று கிடந்தது.
இதையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் ஹரித்துவாரில் சிலை நிறுவ கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து ஹரிஷ் ராவத் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவ தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதன்படி, சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை சனிக்கிழை நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஹரிஷ் ராவத், ஹரித்துவாரில் மேளா பவன் பகுதியில் ஆகஸ்ட் 2 ம் தேதி திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என தெரிவித்தார். மேலும், சிலை நிறுவப்படும் பூங்கா 'திருள்ளுவர் பூங்கா' என அழைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.