பசு மாட்டின் இருதய வால்வைப் பொருத்தி 81 வயது பெண்ணிற்கு மறுவாழ்வு
சென்னை: பசு மாட்டின் இதயத்திலிருந்து எடுக்கப்பட்ட இருதய வால்வு, 81 வயதுப் பெண்ணுக்கு புது உயிர் கொடுத்துள்ளது. இருதய வால்வு சுருங்கியதால் அவதிப்பட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு பசு மாட்டின் வால்வை வைத்து சென்னை பிரன்டியர் லைப்லைன் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இதுகுறித்து மருத்துவனையின் தலைவர் டாக்டர் கே.எம். செரியன் கூறுகையில், "மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவர்களுக்கு இது சிறந்த மாற்றுச் சிகிச்சையாகும்" என்றார்.
இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே 11 வருடங்களுக்கு முன்பு இருதய வால்வு மாற்ற அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அதே மாதிரியான பிரச்சினை அவருக்கு வந்தது.
சரியான தீர்வு..
பல மருத்துவமனைகளை நாடியும் கூட சரியான தீர்வு அவருக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் லைப்லைன் மருத்துவமனைக்கு கடந்த ஏப்ரல் மாதம் வந்தார் இவர்.
சுருங்கிப் போன இருதய வால்வு...
இதுகுறித்து டாக்டர் அனந்தராமன் கூறுகையில், "மூச்சுத் திணறலுடன் அவர் காணப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவரது இருதய வால்வு சுருங்கிப் போயிருந்தது தெரிய வந்தது.
மாற்று அறுவைச் சிகிச்சை...
வழக்கமாக இதுபோன்ற கேஸ்களில் ஓபன் ஹார்ட் சர்ஜரிதான் செய்வாரக்ள். ஆனால் இவரது வயதைக் கருத்தில் கொண்டும், ரிஸ்க்கைக் கருத்தில் கொண்டும் அவருக்கு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய தீர்மானித்தோம்.
ஆபத்தான ஆபரேஷன்...
அதன்படி பசு மாட்டின் இருதய வால்விலிருந்து தயாரிக்கப்பட்ட பயோ பிராஸ்தடிக் வால்வை, சுருங்கிப் போயிருந்த பகுதியை நீக்கி அங்கு இதைப் பொருத்தினோம். இந்தப் பெண் ஏற்கனவே இருதய வால்வு ஆபரேஷன் செய்வதவர் என்பதாலும், சில வருடங்களுக்கு முன்பு மார்பகப் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் என்பதாலும் மிகவும் ரிஸ்க்கானதாக இது இருந்தது. இருப்பினும் எல்லாம் நல்லபடியாக நடந்து அவர் தற்போது நார்மல் நிலையில் உள்ளார்" என்றார்.
3 மணி நேர ஆபரேஷன்...
நான்கு பேர் கொண்ட டாக்டர்கள் குழு 3 மணி நேரம் இந்த ஆபரேஷனை செய்து முடித்தது. தற்போது அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.