ஆறு வயதுக் குழந்தைக்கு பாலியல் கொடுமை – பள்ளி வேன் டிரைவர் கைது
திருப்பூர்: திருப்பூரில் ஆறு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு; பள்ளி வேன் டிரைவர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் அருகிலுள்ள பெருந்தொழுவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிகிறார். அப்பள்ளியில் படிக்கும் 6 வயது குழந்தையை மிரட்டி, வேனுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதை வெளியில் சொன்னால் அடித்து விடுவதாக மிரட்டியதால், அந்தக் குழந்தை இதை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளது. சில நாட்களாக, வீட்டில் சரிவர சாப்பிடாமலும், இரவில் தூங்கும் போது திடீரென்று பயந்து அலறியுள்ளது.
பெற்றோர் குழந்தையிடம் விசாரித்தபோது, டிரைவர் ஆறுமுகம் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், அவினாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், வேன் டிரைவர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.