வீரவாஞ்சிநாதன் 106-ஆவது நினைவு நாள்.. வீர வணக்க நாளாக அனுசரிப்பு
நெல்லை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த வீரவாஞ்சிநாதன் ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற தினமான ஜூன் 17-ஆம் நாள் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்பட்டது.
இந்திய சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களை அன்றைய ஆங்கிலேய அரசு அடக்கு முறையால் ஒடுக்கியும், அடக்கியும் வந்தது. இதை எதிர்த்து ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட திட்டமிட்ட வீரர்களில் வீரவாஞ்சிநாதனும் ஒருவர்.
இந்திய சுதந்திரத்திற்காக போராடிய பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தை அடக்க அப்போதைய நெல்லை கலெக்டர் ஆஷ் துரை துப்பாக்கிக்சூடு நடத்த உத்தரவிட்டார்.
இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனால் வெகுண்ட வாஞ்சிநாதனும், சாவடி அருணாச்சல பிள்ளையும் சேர்ந்து ஆஷ் துரையை சுட்டுக் கொல்ல திட்டமிட்டனர்.
அதன்படி 1911-ம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா புறப்பட்ட ஆஷ் துரையையும், அவரது மனைவியையும் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து வீரவாஞ்சி சுட்டுக் கொன்றார்.
பின்னர் அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு களமரணம் அடைந்தார். வீரவாஞ்சிநாதன் மரணம் அடைந்த ஜூன் 17ம் தேதியில் ஆண்டுதோறும் செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் நடுக்கல்லுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டும் இன்று காலை 10.35 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகள், அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் வீரவாஞ்சிநாதனுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.
மணிமண்டபத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துராமலிங்கம் மாலை அணிந்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வாஞ்சிநாதனின் தம்பி மகன் ஹரிஹர சுப்ரமணியன், பேரன் வாஞ்சி சுப்பரமணியன், வாஞ்சி இயக்க நிறுவனர் ராமநாதன், அதிமுக நகர செயலாளர் குட்டியப்பா, முன்னாள் நகரமன்ற தலைவர் மோகனகிருஷ்ணன், பிராமணர் சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.