வாவ்.. வாவ்.. எம்புட்டுப் பாம்புக் குட்டி பாருங்க.. எல்லாம் நம்ம வண்டலூர் "ராணி" போட்ட குட்டிங்க!
சென்னை: சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள மலைப் பாம்பு ஒன்று 36 குட்டிகளைப் போட்டுள்ளது. இந்த பாம்புக் குட்டிகள் வளர்ந்தவுடன் இதைப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமாம்.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலுள்ள பாம்புகள் கூடத்தில் இருபத்தாறு இந்திய மலைப்பாம்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு பெண் மலைப்பாம்பு இனச்சேர்க்கை செய்து கடந்த 25.04.2016 அன்று 41 முட்டைகளை இட்டது.
இம்முட்டைகளை பெண் மலைப்பாம்பு அடைகாத்து வந்தது. தாய்ப் பாம்பு அடைகாக்கும்போது முட்டைகளை நடுவில் வைத்து அவற்றைச் சுற்றி உடலை வளையம்போல் அமைத்து படுத்துக் கொள்ளும். இதன்மூலம் முட்டைகளுக்கு பிற விலங்குகளிலிருந்து இடையூறு ஏற்படாமல் காக்கப்படுவதோடு, இரவில் நிலவும் குறைந்த வெப்பநிலையிலிருந்து முட்டைகள் பாதுகாக்கப்படுகின்றன.
தசைகளை இறுக்கி
இந்திய மலைப்பாம்புகள் தம் தசைகளை இறுக்குவதன்மூலம் உடலை அதிக வெப்பநிலைக்கு உயர்த்தும் தகவமைப்பு கொண்டவை. அடைகாக்கும் காலம் முடிந்து அதாவது சுமார் 58 நாட்கள் கழித்து 23.06.2016 அன்று 36 இந்திய மலைப்பாம்பு குட்டிகள் முட்டையிலிருந்து வெளி வந்தன.
அடை காப்பதோடு ஓவர்
பாம்பு குட்டிகளின் சராசரி நீளம் 45 முதல் 60 செ.மீ ஆகும. முட்டைகளை அடைகாப்பதோடு மலைப்பாம்புகளின் தாய்மைப் பண்பு முடிவுக்கு வருகிறது. குட்டிகளைப் பராமரிக்கும் பண்புகள் மலைப்பாம்புகளிடம் இல்லை.
அழி நிலையில் உள்ள பாம்பினம்
இந்திய மலைப்பாம்புகள் மிகவும் அழிநிலையில் உள்ள விஷமற்ற பாம்பினமாகும். இது சராசரியாக 4 மீட்டர் நீளம் வரை வளரக் கூடியது. முழு வளர்ச்சியடைந்த பாம்பு சுமார் 50 கிலோ எடை உடையது.
மலையில்தான் அதிகம்
இவை இந்திய துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்பட்டாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. வளைகள், மரப்பொந்துகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள அடர்ந்த நீர்த்தாவரங்களில் இவை வசிக்கும். பெரும்பாலும் இவை நீர்நிலைகளுக்கு அருகிலேயே வசிக்கும் தன்மையுடையது.
எலிதான் சாப்பாடு
தற்பொழுது பிறந்துள்ள மலைப்பாம்பு குட்டிகளை நல்ல முறையில் வளர்க்கும் பொருட்டு தனியே பிரித்து, பாம்புகள் இல்லம் பின்புறம் உள்ள மரங்கள் சூழ்ந்த வளாகத்தில் தனித்தனி மண்பானைகளில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. மேற்படி குட்டிகள் பிறந்த ஒரிரு வாரங்களுக்கு உணவு ஏதும் உட்கொள்ளாது. அதன் பிறகு குட்டிகளுக்கு பூங்காவிலுள்ள எலிகள் இனப்பெருக்க மையத்திலிருந்து ஒரு வாரம் வயதுள்ள எலிக் குட்டிகள் உணவாக வழங்கப்படும்.
வளர்ந்ததும் பார்வைக்கு
மலைப்பாம்பு குட்டிகள் நன்கு வளர்ந்தவுடன் பாம்புகள் இல்லத்தில் பார்வையாளர்களுக்காக வைக்கப்படும் என்பதைப் பூங்கா நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..