தாயால் கைவிடப்பட்ட யானைக்குட்டிக்கு வண்டலூர் பூங்காவில் “ஸ்பெஷல்” பராமரிப்பு!
வண்டலூர்: கன்னியாகுமரியில் தாயால் கைவிடப்பட்ட பெண் யானைக்குட்டி ஒன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் தாயை பிரிந்து தவிக்கும் யானைக்குட்டிகள் வனத்துறையினரால் கண்டறியப்படுகின்றன.
அவை, சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் கைவளர்ப்பின் மூலம் சிறப்பான முறையில் வளர்க்கப்படுகிறது.
சத்தியமங்கலம் யானைக் குட்டிகள்:
இதில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாயால் கைவிடப்பட்ட யானைக்குட்டிகள் விக்ரம், அபினயா, அசோகன், சரவணன், கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் தாயால் கைவிடப்பட்ட கிரி, உரிகம் ஆகிய யானைக்குட்டிகளை அங்கிருந்து கொண்டுவந்து அதனை பூங்காவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி கைவளர்ப்பினால் வளர்த்து வருகின்றனர்.
கன்னியாகுமரி பெண் யானைக்குட்டி:
இந்த நிலையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு வனப்பகுதியில் தாயால் கைவிடப்பட்ட பெண் யானைக்குட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கடந்த 2 ஆம் தேதி கொண்டுவரப்பட்டு தற்போது பூங்காவில் யானைக்குட்டிக்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு இடத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
யானைக்குட்டிகளுக்கு "மெத்தை":
வெயில் மற்றும் குளிர்நேரங்களில் யானைக்குட்டி படுப்பதற்கு தனி, தனியாக 2 அறைகள் உள்ளன. இந்த அறைகளில் யானைக்குட்டி இரவு நேரத்தில் படுத்து தூங்குவதற்கு வைக்கோலில் அமைக்கப்பட்டுள்ள மெத்தையும் உள்ளது.
3 அடுக்கு பாதுகாப்பு:
மேலும் இரவு நேரங்களில் யானைக்குட்டிக்கு அதிக அளவு குளிர் ஏற்படும் போது அறையின் அருகே நெருப்பு மூட்டப்படுகிறது. தற்போது ஒரு மாதம் ஆகும் இந்த யானைக்குட்டி 3 அடுக்கு பாதுகாப்பில் உள்ளது.
தாயாகிய பாகன்:
இந்த யானைக்குட்டியை பராமரிக்கும் பாகன் எப்போதும் யானைக்குட்டியுடன் இருப்பதால் பாகனை யானைக்குட்டி தனது தாயாக நினைத்து சுற்றி சுற்றி வந்து தனது மகிழ்ச்சியை தும்பிக்கையின் மூலம் உயர்த்தி காட்டுகிறது.
மருத்துவர்களுக்கு மட்டுமே அனுமதி:
பூங்காவில் யானைக்குட்டியை பராமரிக்கும் இடத்திற்கு மருத்துவர்கள், பாகன் ஆகியோர் செல்வதற்கு முன்பு பெரிய தொட்டியில் நிரப்பப்பட்ட கிருமி நாசினி தண்ணீரில் கால்களை கழுவிய பிறகு தான் உள்ளே செல்லவேண்டும், வேறு பூங்கா ஊழியர்கள், அதிகாரிகள் யானைக்குட்டி அறைக்கு செல்வதற்கு அனுமதி கிடையாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
யானைக் குட்டிக்கு லாக்டோஜன்:
இந்த பெண் யானைக்குட்டிக்கு தினமும் 1 லிட்டர் லாக்டோஜன், 10 இளநீர், 250 கிராம் குளுக்கோஸ் ஆகியவை வெந்நீரில் கலந்து டியூப் மூலம் வழங்கப்படுகிறது.
பைபிளாக் மருந்து:
மேலும் யானைக்குட்டிக்கு செரிமானம் ஏற்படுவதற்கும், அதன் வயிற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் நல்ல முறையில் மேம்படுத்துவதற்காகவும் பைபிளாக் என்ற மருந்து வென்னீரில் கலந்து தரப்படுகிறது.
காயங்கள் அனைத்தும் குணம்:
யானைக்குட்டி பூங்காவிற்கு வந்த பிறகு சுமார் 5 கிலோ எடை அதிகரித்துள்ளது. யானைக்குட்டி பூங்காவிற்கு வரும் போது உடலில் பல இடங்களில் காயங்களுடன் வந்தது. தற்போது அதன் உடலில் இருந்த காயங்கள் அனைத்தும் சரியாகி விட்டது என்று பூங்கா மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகன் மூலம் நடைப்பயிற்சி:
மேலும் யானைக்குட்டிக்கு தினமும் காலையில் அரை மணி நேரமும், மாலை நேரத்தில் அரை மணி நேரமும் பாகன் மூலம் நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
8 மாதங்கள் கழித்து பார்வைக்கு:
யானைக்குட்டி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது. இந்த யானைக்குட்டி நல்ல முறையில் வளர்ந்த பிறகு சுமார் 8 மாதம் கழித்து பார்வையாளர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் பூங்காவில் உள்ள மற்ற யானைகளுடன் பழகவிடப்படும் என்று பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.