நெல்லையில் அசத்தல்.. வாங்க பழகலாம் பெயரில் வகுப்புகள்.. கிராம-நகர்ப்புற மாணவர்களை இணைக்கும் பாலம்
வாங்க பழகலாம் என்ற பெயரில் கிராம மற்றும் நகரப்புற மாணவர்களை கலந்து பழக செய்யும் கல்வி வகுப்புகள் நெல்லையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி: கிராமப்புறத்தில் பயிலும் மாணவர்களுக்கும், நகரப்புறத்தில் பயிலும் மாணவர்களும் படிப்பில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இதை அவர்கள் பரஸ்பரம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதனை அவர்கள் உணர அனைவருக்கும் கல்வி இயக்கம் முன்வந்துள்ளது.
இதில் தேர்வு செய்யப்படும் கிராமப்புற பள்ளி அரசு பள்ளியாக இருந்தால் நகரத்து பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாக இருக்க வேண்டும் என்ற ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி நெல்லை மாநகரில் அரசு உதவி பெறும் பள்ளியான, மதிதா இந்து பள்ளி மாணவர்கள் 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுடன் கல்வி பயில நெல்லை தேவர்குளம் அருகே உள்ள கூவச்சிபட்டி கிராம பஞ்சாயத்து யூனின் பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவர்கள் 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் இந்த கல்வி ஆண்டு முழுவதும் ஓவ்வொரு பாடத்திற்கும் 1 நாள் என 5 நாட்கள் இரு பள்ளிக்கும் அழைத்து செல்லப்பட்டு ஓரே வகுப்பில் அமர வைக்கப்பட்டு பாடம் காற்று தருவார்கள். இந்த நாட்களில் அரசு செலவிலேயே அவர்களுக்கு உணவு, வாகன வசதி செய்யப்படும். திட்டமிட்டப்படி கூவச்சிபட்டி மாணவர்கள் நெல்லை சந்திப்பு மேல்நிலைப்பள்ளிக்கு வந்து ஓரே வகுப்பில் அமர்ந்து பாடம் கற்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், வாங்க பழகலாம் என்ற தலைப்பில் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் சேர்ந்து படிக்கும் போது புதிய உத்வேகத்துடன் படிக்கின்றனர். இதனால் அவர்கள் சிந்தனை திறன் மேம்படும் என்று தெரிவித்தனர்.