வாணியம்பாடி நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதி.. அனைத்து வார்டும் சீல்.. கலெக்டர் அறிவிப்பு
திருப்பத்தூர்: வாணியம்பாடியை நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவி வரும் வேகம் முன்பை விட இப்போது குறைந்து வந்தாலும், இன்றைய நிலவரப்படி 1242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 22 மாவட்டங்களை கொரோனா பரவும் ஹாட்ஸ்பாட்டுகளாக (அதிகம் பரவக்கூடியவை) அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்நிலையில் வேலூரில் இருந்து பிரிந்த திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 39 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 16 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒருங்கிணைந்த (பழைய) வேலூர் மாவட்டத்தில் மட்டும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தின் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த பகுதிகளில் ஒன்றாக வாணியம்பாடி உள்ளது. இதையடுத்து வாணியம்பாடியை நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவிட்டுள்ளார்..
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதிகள் 100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.
வாணியம்பாடி பகுதியில் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படாது. வாணியம்பாடி நகரத்தில் உள்ள அனைத்து வார்டு வழித்தடங்களும் மூடப்பட்டு சீல் வைக்கப்படும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க 82700 07135, குடிநீர் மற்றும் சுகாதார தேவைக்கு - 82700 07148, காவல்துறை - 82700 07149 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.